பார்சிலோனா: இதயக் கோளாற்றுக் காரணமாக தொழில்முறைக் காற்பந்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் அர்ஜென்டினா நட்சத்திரம் செர்ஜியோ அகுவேரோ. தான் ஆடிய 786 ஆட்டங்களில் 427 கோல்களைப் போட்டுள்ளார் முன்னிலை வீரரான இவர்.
கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று ஸ்பானிய லீக்கில் அலாவெஸுக்கு எதிராகத் தனது புதிய அணியான பார்சிலோனாவிற்கு ஆடும்போது அகுவேரோவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதற்குப் பிறகு 33 வயது அகுவேரோ ஓய்வுபெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகிவந்தன.
சென்ற பருவம்வரை இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டிக்கு ஆடினார் அகுவேரோ. 2011ஆம் ஆண்டு சிட்டியில் சேர்ந்தார். அவரின் வருகை, சிட்டி அபாரமான அணியாக உருவெடுப்பதற்கு முக்கியப் பங்கு வகித்தது என்றால் அது மிகையாகாது.
உலகின் ஆகச் சிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகக் காற்பந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் அகுவேரோ.

