பர்ன்லீ (இங்கிலாந்து): விளையாட்டாளர்கள், இதர பணியாளர்கள் என சில இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணிகளில் பலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் பல ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன. பர்ன்லீயும் வாட்ஃபர்ட்டும் நேற்று முன்தினம் மோதவிருந்த ஆட்டம், அதற்கு முன் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் பிரென்ட்ஃபர்ட்டுக்கும் இடையே நடைபெறவிருந்த ஆட்டம், டாட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் பிரைட்டனும் சந்திக்கவிருந்த ஆட்டம் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன. ஆகக் கடைசி நிலவரப்படி யுனைடெட்டில் மேலும் சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் எல்லா அணிகளும் பிரச்சினையை எதிர்கொள்வதாக சில அணிகள் கூறுகின்றன. "நாம் செல்லும் பாதையில் எத்தனை நாள்கள் நீடிக்கமுடியும் என்பது தெரியவில்லை," என்றார் பிரைட்டன் நிர்வாகி கிராகம் போர்ட்டர். வுல்வ்ஸுக்கு எதிரான அதன் ஆட்டத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளான சில விளையாட்டாளர்கள் இடம்பெறவில்லை.
"கொவிட்-19 கிருமித்தொற்று என்பது 10 நாள்களுக்கு மட்டும் நீடிப்பது அல்ல, குணமடைந்த பிறகும் பாதிக்கப்பட்டவரின் உடல் அவ்வளவு வலுவாக இருக்காது. அதனால் குணமடைந்த பிறகும் விளையாட்டாளர்களுக்குக் காயமடையும் வாய்ப்புகள் அதிகம் உண்டு," என்று ஸ்பர்ஸ் நிர்வாகி என்டோனியோ கொன்டே கூறியிருந்தார். பிரண்ட்ஃபர்ட் நிர்வாகி தாமஸ் ஃபிராங்கும் குரல் கொடுத்துள்ளார். இந்நிலை இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று சொல்லமுடியாது. சென்ற பருவத்திலும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இப்பிரச்சினை தலைதூக்கியது. அப்போது சில அணிகள் ஆட்டங்களை நிறுத்திவைக்குமாறு வேண்டின. இறுதியில் பருவம் திட்டமிட்டபடியே நடந்துமுடிந்தது.

