சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான சுசுகி கிண்ணப் போட்டியில் இந்தோனீசியாவும் நடப்பு வெற்றியாளரான வியட்னாமும் மோதிய ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. இதனால் 'பி' பிரிவிலிருந்து வியட்னாம் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவது இன்னமும் உறுதியாகவில்லை.
இப்பிரிவில் தற்போது முதலிடத்தை வகிக்கும் இந்தோனீசியாவுடன், வியட்னாம்,, மலேசியா ஆகிய இரண்டுக்கும் அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தோனீசியா, வியட்னாம் இரண்டும் இப்பிரிவில் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வென்றன. இவ்வாட்டத்தை இரண்டில் ஓர் அணி வென்றிருந்தால் அது அரையிறுதிச் சுற்றுக்குச் செல்வது உறுதியாகியிருக்கும்.
வியட்னாம்தான் வெல்லும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துடிப்புடன் ஆடியபோதும் வாய்ப்புகளைக் கோலாக்கத் தவறியது வியட்னம்ா.
இனி 'பி' பிரிவின் கடைசி ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக அமையலாம். கம்போடியாவை வென்றால் வியட்னாம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும். கம்போடியாவை வெல்வது வியட்னாமுக்கு சுலபம் எனக் கருதப்படுகிறது.
மற்றோர் ஆட்டத்தில் இந்தோனீசியாவும் மலேசியாவும் மோதும். இவ்வாட்டத்தில் வெல்லும் அணியும் அரையிறுதிக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
'பி' பிரிவில் தற்போது வியட்னாம் இரண்டாவது இடத்தில் உள்ளது, மலேசியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 'ஏ' பிரிவிலிருந்து தாய்லாந்தும் இப்போட்டியை ஏற்று நடத்தும் சிங்கப்பூரும் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன.

