லண்டன்: கொரோனா கொள்ளைநோய் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களை பந்தாடிவரும் நிலையில், நேற்று அதிகாலை எவர்ட்டனுடனான ஆட்டத்தில் செல்சி சறுக்கியது. இதனால், பல வாரங்களாக தரவரிசைப் பட்டியலில் முன்னணி வகித்த அந்த அணி தற்பொழுது மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்துடன், முதல் நிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியைவிட நான்கு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டக்காரர்களான ரொமேலு லுக்காகு, டிமோ வெர்னர் ஆகியோருடன் கேலம் ஹட்சன் ஒடோய் என்ற வீரரும் கொரோனா பாதிப் புக்கு ஆளாகி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில வீரர்களும் காயம், கொரோனா காரணமாக விளையாட முடியாத நிலையில் எவர்ட்டன் தற்காப்பு அரணை தகர்க்க செல்சி தடுமாறியது. பின்னர், எப்படியோ சமாளித்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேசன் மௌண்ட் என்ற வீரர் போட்ட கோலால் முன்னிலை பெற்றது. ஆனால், தற்காப்பில் கவனமின்றி விளையாடியதால், கடைசி 16 நிமிடங்கள் இருக்கும் நிலையில் எவர்ட்டடன தற்காப்பு வீரரான ஜேரட் பிரன்த்வெய்ட், எவர்ட்டன் குழுவில் விளையாட ஆரம்பித்ததற்கு அடையாளமாக, கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார்.

