லீட்ஸ்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் பல அணிகள் அமைதியாக இருக்கவேண்டிய கட்டாயம் இருந்துவரும் வேளையில் மெல்ல மெல்ல மேம்பட்டுவருகிறது இளம் விளையாட்டாளர்களின் உற்சாகத்தால் துடிப்புடன் ஆடும் ஆர்சனல் காற்பந்து அணி. கடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் ஆறு கோல்களைப் போட்டு வென்றுள்ளது ஆர்சனல்.
பிரிமியர் லீக்கில் சில அணிகளில் விளையாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால் வேறு வழியில்லாமல் பல ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலவரம் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தன்னை மேம்படுத்திக்கொள்வதில் முழு கவனம் செலுத்திவருகிறது ஆர்சனல். நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டார் இளம் நட்சத்திரம் கேப்ரியல் மார்ட்டினெல்லி. இதுவரை இவரை விளையாடுவதில் பொறுமை காத்தது நல்ல பலனளித்துள்ளது என்றார் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா. "விளையாட்டாளரை தினமும் கவனிக்கும்போது எப்படி, எப்போது அவரைக் களமிறக்கினால் சிறப்பாக ஆடுவார் என்பது தெரியவரும், அதைப் பருவம் முழுவதும் தொடரவைக்கவேண்டும்," என்று அர்ட்டெட்டா கூறினார். கடந்த சில வாரங்களாக அபாரமாக விளையாடிவருகிறார் பிரேசிலைச் சேர்ந்த 20 வயது வீரரான மார்ட்டினெல்லி.
ஆர்சனலின் இதர இரண்டு கோல்களைப் போட்டவர்கள் எமில் ஸ்மித் ரோ, புக்காயோ சாக்கா. லீக் பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ளது ஆர்சனல். அவ்விடத்தில் இருந்த வெஸ்ட் ஹேம் யுனைடெட்டையும் சென்ற வாரம் வென்றது.
தொடர்ந்து சிறப்பாக ஆட சிரமப்பட்டாலும் பெரிதும் மேம்பட்டு தனது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது, இப்பருவத்தின் முதல் மூன்று லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்து திக்குமுக்காடிய ஆர்சனல்.

