சிங்கப்பூர்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியின் அரை
யிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் இன்றிரவு 8.30 மணிக்குக் களம் இறங்குகிறது. இந்தோனீசியாவுக்கு எதிரான இந்த அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் இறுதிச் சுற்று ஆட்டத்துக்கு முன்னேற, முதல் சுற்றில் செயல்பட்டதைவிட மேலும் சிறப்பாக விளையாட வேண்டும் என
சிங்கப்பூர் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருண் தெரிவித்துள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற தமது அணி முனைப்புடன் இருப்பதாக அவர் கூறினார். இப்போட்டியில் சிங்கப்பூர் குழு அதன் முதல் ஆட்டத்தில் மியன்மாரை 3-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது.
அதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் அது வாகை சூடியது. திமோர் லெஸ்டேயை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய சிங்கப்பூர், முதல் சுற்றின் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தைச் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் தோல்வியின் பிடியில்
சிங்கப்பூர் சிக்கிக்கொண்டது. 2-0 எனும் கோல் கணக்கில் தாய்லாந்திடம் தோல்வி அடைந்ததால் 'ஏ' பிரிவில் முதல் இடத்துக்குப் பதிலாக இரண்டாவது இடத்தை அது பிடித்தது.
இதன் காரணமாக 'பி' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த இந்தோனீ சியாவுடன் சிங்கப்பூர் அரையிறுதி யில் மோதுகிறது. இந்தோனீசியா அதன் முதல் சுற்று ஆட்டங்களில் சக்கைப்போடு போட்டது. மூன்று வெற்றிகள், ஒரு சமநிலையுடன் பத்து புள்ளிகளை அது பெற்றது. வியட்னாமும் பத்து புள்ளிகள் பெற்றது. இருப்பினும், முதல் சுற்றில் கோல் மழை பொழிந்த இந்தோனீசியா, வியட்னாமைவிட அதிக கோல்கள் போட்டு கோல் வித்தியாசத்தில் 'பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
திமோர் லெஸ்டேவுக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் குழுவின் செயல்பாடு திருப்திகரமாக அமையவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது. இதைச் சரிசெய்து தங்கள் திறனை வெளிப்படுத்தும் நோக்குடன் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் ஆட்டக் காரர்கள் களமிறங்கினர். ஆனால் அந்த ஆட்டத்தில் சிங்கப்பூருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தோனீசியாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்ப
வேண்டும் என்ற வேட்கையுடன்
சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள்
ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
"முதல் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு எங்களுடைய ஆட்டம் திருப்திகரமாக அமையவில்லை. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரையிறுதிச் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெற்றுள்ளோம். இருப்பினும், இந்தோனீசியாவுக்கு எதிரான ஆட்டம் சவால்மிக்கதாக அமையும் என்பது எங்களுக்குத் தெரியும்," என்றார் 31 வயது ஹாரிஸ். இதற்கிடையே, முதல் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் மலேசி யாவை 4-1 எனும் கோல் கணக்கில் புரட்டி எடுத்த இந்தோனீசியா, சிங்கப்பூரையும் தோற்
கடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. இருப்பினும், சொந்த மண்ணில் விளையாடுவது சிங்கப்பூர் அணிக்குச் சாதகமாக அமையும் என்று அக்குழுவின் தென்கொரியத் தலைமைப்
பயிற்றுவிப்பாளர் ஷின் டே யோங் கூறினார்.
"மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தை இறுதிச் சுற்று ஆட்டமாக நினைத்துக்கொண்டு விளையாடும்படி எனது ஆட்டக்காரர்களிடம் கூறினேன். மலேசியாவுக்கு எதிராக நாங்கள் காட்டிய தீவிரத்தை சிங்கப்பூருக்கு எதிராகவும் நாங்கள் காட்ட வேண்டும்.
"சிங்கப்பூர் குழு விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். தாக்குதல், தற்காப்பு இரண்டிலும் அக்குழு நன்றாகச் செயல்படுகிறது. சிங்கப்பூர் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது," என்றார் ஷின் டே யோங்.

