சிங்கப்பூர்: உலகப் பூப்பந்துப் போட்டியில் தங்கம் வென்று முத்திரை பதித்துள்ள சிங்கப்பூர் வீரர் லோ கியன் இயூ நேற்று சிங்கப்பூர் திரும்பினார். சாங்கி விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு தரப்பட்டது. உலகளவில் சிங்கப்பூருக்குப் பெருமை தேடித் தந்துள்ள லோ அடுத்த இலக்குக்குக் குறிவைத்துவிட்டார். ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று வரலாற்றில் அவர் இடம்பிடிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் பூப்பந்துச் சங்கம் விரும்புகிறது. அதற்குத் தேவையான ஏற்பாடுகளை அது செய்து வருகிறது. உலகப் பூப்பந்துப் போட்டியில் வாகை சூட, போட்டிக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டென்மார்க்கின் விக்டர் அஸெல்சனுடன் ஒரு மாதப் பயிற்சியில் லோ ஈடுபட்டதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே, ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வகையில் லோ தொடர்ந்து அஸெல்சனுடன்
பயிற்சியில் ஈடுபடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.