சுசுகி கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனீசியாவிடம் போராடித் தோற்றது சிங்கப்பூர்
சிங்கப்பூர்: மூன்று ஆட்டக்காரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு திடலை விட்டு வெளியேறி, குழுவில் எட்டு ஆட்டக்காரர்களே எஞ்சியிருந்தாலும், சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு அந்தப் பின்னடைவு நிலைக்குள் தள்ளப்
படாமல், அதிலிருந்து துணிச்சலாக மீண்டு வந்து அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி, அனை
வரின் பாராட்டுகளையும் பெற்றது.
சனிக்கிழமை இரவு தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற சுசுகி கிண்ண இரண்டாம் சுற்று அரையிறுதிப் போட்டியில் இயல்பான நேர முடிவில் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. அதில் இந்தோனீசியா 4-2 என்ற கோல் கணக்கிலும் 5-3 என்ற ஒட்டு மொத்த கோல் கணக்கிலும் வெற்றி பெற்றதால், அந்த அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இது இந்தோனீசியாவுக்கு ஆறாவது சுசுகி கிண்ண இறுதிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிப் போட்டி போன்ற முக்கியமான ஆட்டங்களில் நடுவர்களின் பங்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று இந்தோனீசியக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஷின் டே-யோங், வியட்னாமின் பயிற்றுவிப்பாளர் பார்க் ஹாங்-சியோ இருவரும் கருத்துத் தெரிவித்துஇருந்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் 'விஏஆர்' எனப்படும் காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்தனர்.
நேற்று முன்தின ஆட்டத்துக்குப் பிறகு சிங்கப்பூர் குழுவின் பயிற்று விப்பாளர் டட்சுமா யோஷிடாவும் நிச்சயமாக இந்தக் கருத்துகளை ஒப்புக்கொண்டிருப்பார்.
இந்தோனீசியாவுடனான ஆட்டத்தில், சிங்கப்பூர் குழுவுக்கு எதிராக ஓமானின் நடுவர் கசிம் மட்டார் அலி அல்-ஹட்டாமி எடுத்த பல முடிவுகள் அவர் உட்பட சிங்கப்பூர் குழுவின் அதிகாரிகள் மட்டு மல்லாமல் அரங்கில் குழுமியிருந்த 9,982 ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் எஸ்ரா வாலியான் போட்ட கோலால் இந்தோனீசியா முன்னணிக்குச் சென்றது. 36வது நிமிடத்தில் இந்தோனீசியாவின் விட்டானை சரியான முறையில் தடுத்து நிறுத்தினார் என்றாலும் அது நடுவரின் பார்வைக்குத் தவறாகத் தோன்றிய தால், சிங்கப்பூரின் சஃபுவான் பஹாருடினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஐந்து நிமிடம் கழித்து சிங்கப்பூரின் ஏமி ரெச்சாவை, இந்தோனீசியாவின் ரஹ்மாட் இரியாந்தோ முரட்டுத்தனமாக வீழ்த்தினார். ஆனால், நடுவரின் பார்வைக்கு அது தவறாகத் தோன்றாததால், சிங்கப்பூர் குழுவின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இருள் சூழும் நேரம் தொடங்கிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டியது.
முற்பாதி ஆட்டம் முடிவடையும் தருணத்தில் இந்தோனீசியாவின் ரிக்கி ரிதோவுடன் சிங்கப்பூரின் சஃபுவான் பஹாருடின் கைகலப்பில் ஈடுபட்டதால், நடுவர் அவருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டையும் சிவப்பு அட்டையும் காண்பித்து திடலை விட்டு வெளியேற்றினார்.
சில வினாடிகள் கழித்து சிங்கப்பூரின் சோங் உய்-யங் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 67வது நிமிடத்தில் இந்தோனீசியாவின் இர்ஃபான் ஜெயாவை ஆபத்தான முறையில் வீழ்த்திய தாகக் கூறி சிங்கப்பூரின் இர்ஃபான் ஃபாண்டிக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்தார்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தோனீசிய ஆட்டக் காரர்கள் 18 முறை தவறு செய்தபோதிலும் ஒருமுறைகூட அவர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.
74வது நிமிடத்தில் இந்தோனீசியாவின் மற்றொரு தவற்றால், சிங்கப்பூருக்குக் கிடைத்த 'ஃபிரிகிக்' வாய்ப்பை அற்புதமாக கோலாக்கினார் ஷாடான் சுலைமான்.
சிங்கப்பூர் கோல் காப்பாளர் ஹசான் சன்னி அருமையாக விளையாடி எதிரணி கோல் போடும் வாய்ப்புகளைத் தடுத்துக்கொண்டிருந்தார். அதேபோல் 87வது நிமிடத்தில் எதிரணியின் விட்டானின் முயற்சியை ஹசான் தடுத்தார்.
இருப்பினும் ப்ரதாமா அர்ஹான் அதைக் கோலாக்கினார். 'ரீப்பிளே' காட்சிகளைப் பார்க்கும்போது, அர்ஹான் 'ஆஃப்சைட்' நிலையில் இருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தும் அது நடுவர், துணை நடுவர் கண்களுக்குப் புலப்படவில்லை. 89வது நிமிடத்தில் சிங்கப்பூருக்குக் கிடைத்த அற்புதமான பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கத் தவறினார் ஃபாரிஸ் ரம்லி.
பின்னர் கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் சிங்கப்பூரின் ஷவால், பந்தை அப்புறப்படுத்தத் தவறியதால், எதிரணியின் இர்ஃபான் ஜெயா அந்தப் பந்தை வலைக்குள் தள்ளினார்.
105வது நிமிடத்தில் இந்தோனீசியா தனது 4வது கோலையும் போட்டு, தனது வெற்றியை உறுதிப் படுத்தியது.
119வது நிமிடத்தில் இர்ஃபான் ஜெயாவை முரட்டுத்தனமாக வீழ்த்தியதால் சிங்கப்பூரின் கோல் காப்பாளர் ஹசானுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டம் பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளர் டட்சுமா யோஷிடா, "சிங்கப்பூர் அணி வெளிப்படுத்திய மிகச் சிறந்த குழு உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஓர் ஆட்டக்காரரை இழந்தோம். பின்னர் இரண்டாவது ஆட்டக்காரர். அதன் பிறகு மூன்றாவது ஆட்டக்காரர். இருப்பினும் குழுவின் இறுதிவரை போராடும் ஆற்றல்தான் மிக மிக முக்கியமானது. நாம் மேலும் வலுவாக உருவாக அதுதான் நமக்குத் தேவை.
"ஆசியாவின் பலம் வாய்ந்த குழுக்கள் வரிசையில் நாமும் இடம்பெற வேண்டும் எனும் வேட்கையில் ஆட்டக்காரர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். இல்லையேல் நம்மால் சாதிக்க முடியாது," என்றார்.
தோல்வியடைந்தாலும் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் கடைசிவரை போராடும் தன்மையை சிங்கப்பூரர்கள் பலரும் வெகுவாக சமூக ஊடகங்களில் பாராட்டினர்.
பிரதமர் லீ சியன் லூங், கூறுகையில் "2012ஆம் ஆண்டிலிருந்து இப்போதுதான் சிங்கப்பூர் குழு சுசுகி கிண்ண அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தோனீசியாவிடம் தோல்வி கண்டாலும், சிறந்த போராடும் தன்மையை சிங்கப்பூர் அணியினர் போட்டியில் காட்டினர். இந்தத் துணிச்சலான முயற்சியில் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்திக் கவர்ந்த சிங்கப்பூர் அணிக்கு எனது பாராட்டுகள்," என்றார்.
"மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சிங்கப்பூர் அணி, காலாங் கர்ஜனையையும் திரும்ப கொண்டு வந்துள்ளது," என்றார் அமைச்சர் எட்வின் டோங்.

