மேல்முறையீடு தோல்வி; எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்குப் புறப்பட்ட டென்னிஸ் நட்சத்திரம்

மேல்முறையீடு தோல்வி; எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்குப் புறப்பட்ட டென்னிஸ் நட்சத்திரம்

1 mins read
0aa40099-4e37-4ce8-8c28-2257b40d8048
மெல்பர்ன் விமான நிலையத்தில் நோவாக் ஜோக்கோவிச் (இடமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ் -

தமது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உலகின் முதல்நிலை டென்னிஸ் ஆட்டக்காரர் நோவாக் ஜோக்கோவிச், 34, தொடுத்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், கொவிட்-19 தடுப்பூசி நிலை தொடர்பிலான அவரது 11 நாள் போராட்டம் முடிவிற்கு வந்தது. அத்துடன், அவரது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டக் கனவும் கலைந்துபோனது.

நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத செர்பியாவின் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பால் பெருத்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறிய ஜோக்கோவிச், ஆனாலும் அதனை மதிப்பதாகவும் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறுவது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) மாலை துபாய்க்குப் புறப்பட்டார் ஜோக்கோவிச்.

முன்னதாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், மருத்துவக் காரணங்களுக்காக ஜோக்கோவிச்சிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு, அவர் ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.