லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லிக், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணம் ஆகிய மூன்று காற்பந்துப் போட்டிகளிலும் மான்செஸ்டர் சிட்டிக்குப் போட்டியாக விளங்குகிறது லிவர்பூல்.
இவ்விரு அணிகளும் இந்த மூன்று போட்டிகளிலும் கிண்ணத்தை வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளன.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியிலில் இவ்விரு அணிகளும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.
'சாம்பியன்ஷிப்' எனும் பிரிமியர் லீக்கிற்கு அடுத்த நிலையில் உள்ள லீக்கில் போட்டியிடும் நோட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டை லிவர்பூல் இன்று எஃப்ஏ கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் சந்திக்கிறது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சவுத்ஹேம்ப்டனுடன் மோதுகிறது சிட்டி.
இரு அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. ஆனால் எஃப்ஏ கிண்ணத்தில் எதிர்பாரா முடிவுகள் வருவது ஆச்சரியமல்ல. அதனால் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பது லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளாப், சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா ஆகிய இருவருக்கும் தெரியும்.
பிரிமியர் லீக்கில் சில வாரங்களுக்கு முன் முதலிடத்தை வகிக்கும் சிட்டிக்கும் இரண்டாம் இடத்தில் உள்ள லிவர்பூலுக்கும் இடையே சுமார் 13 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது.
இப்போது வித்தியாசம் ஒரு புள்ளியாகக் குறைந்துவிட்டது. சிட்டி தன்வசப்படுத்திய கரபாவ் கிண்ணத்தையும் இந்தப் பருவத்தில் லிவர்பூல் வென்றது.
இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஆகச் சிறந்த காற்பந்து அணி என்ற பெயரைப் பெற நினைக்கும் சிட்டிக்கு லிவர்பூல் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளது.

