நட்புமுறை ஆட்டங்களில் விளையாடுவதற்காக பஹ்ரேனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியக் காற்பந்துக் குழு, சனிக்கிழமை (மார்ச் 26) பெலருஸ் குழுவை எதிர்கொண்டது.
அந்த ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் இந்தியக் குழு தோல்வியுற்றபோதிலும், அக்குழுவில் இடம்பெற்ற வீரர்கள் மூவர், இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளனர்.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, தத்தம் சமய முறைப்படி அந்த மூவரும் நின்றவாறு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
அந்தத் தருணத்தைக் குறிக்கும் புகைப்படம் ஒன்று, வீரர்கள் ஆட்டத்திற்கு தயாராகும் மற்ற படங்களுடன் சேர்ந்து இந்தியக் காற்பந்துக் குழுவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
எனினும், வீரர்கள் பிரார்த்தனை செய்யும் குறிப்பிட்ட அந்தப் புகைப்படம் மட்டும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
அந்தப் படத்தைப் பகிர்ந்த அவர்கள், அனைத்து சமயங்களையும் மதிக்கும் தேசத்தின் மூல பண்புநலன்கள் இந்தியக் காற்பந்துக் குழுவில் இடம்பெற்றிருப்பதை வெகுவாகப் பாராட்டினர்.


