ஹனோய்: சிங்கப்பூர் தேசிய மகளிர் காற்பந்து அணி 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் அணி, லாவோசுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாற்று வீராங்கனையாக வந்த இஸாட் ரோஸ்னி ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் அந்த வெற்றி கோலை அடித்தார்.
கடந்த 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் மகளிர் காற்பந்து அணி பங்கேற்றது இதுவே முதன்முறை; ஒட்டுமொத்தத்தில் இது 5ஆம் முறை.
கடைசியாக, கடந்த 1985ஆம் ஆண்டு பேங்காக்கில் நடந்த போட்டிகளில் 2-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பீன்சை சிங்கப்பூர் மகளிரணி வென்றிருந்தது. அம்முறை சிங்கப்பூர் மகளிரணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
அத்துடன், 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் மகளிரணி கோலடித்திருப்பதும் இதுவே முதன்முறை.
தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்திடம் 3-0 எனத் தோற்றுப்போன சிங்கப்பூர் மகளிரணி, அடுத்ததாக நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் மியன்மாரை எதிர்கொள்கிறது.
சிங்கப்பூர்-மலேசியா மோதல்
இதனிடையே, இன்று நடக்கவுள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் சிங்கப்பூர் ஆடவர் காற்பந்து அணி, மலேசியாவைச் சந்திக்கிறது.
கட்டாய வெற்றியை நோக்கிக் களம் காண்கிறது சிங்கப்பூர் அணி. இந்த ஆட்டத்தில் வென்றாலும்கூட, அரை இறுதிக்கு முன்னேறுவது மற்ற ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். ஆனாலும், தாங்கள் அரை இறுதிக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் பயிற்றுநர் நஸ்ரி நசீர்.
சிங்கப்பூர்-மலேசியா ஆட்டம் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

