ஆண்டின் சிறந்த வாட்சண்டை வீராங்கனையாக சிங்கப்பூரின் அமிதா பெர்த்தியரை (படம்) அமெரிக்க வாட்சண்டைப் பயிற்றுவிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் தாம் பெருமையாக உணர்வதாகவும் ஒரு சிங்கப்பூரராக இருப்பது இவ்வெற்றியை மேலும் சிறப்பாக்கி உள்ளதாகவும் கூறினார் நோட்ர டாம் பல்கலைக்கழக மாணவியான அமிதா, 21. தமது கல்வி நிலையம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல வெற்றிகளைக் குவித்ததால் இந்தச் சிறப்பு இவரைச் சென்று சேர்ந்தது. சென்ற ஆண்டிலும் இவ்வாண்டிலும் தேசிய கல்லூரி திடல்தடச் சங்க வாட்சண்டை வெற்றியாளர் போட்டியில் இவர் வாகை சூடினார்.
மூன்றாமாண்டு பட்டக் கல்வி பயின்று வருவதால் நடப்பு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்கவில்லை. இதற்குமுன் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.