லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனதால், ஆர்சனல் குழு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் திரும்பும் வாய்ப்பு ஊசலாடுகிறது.
ஆட்டத்தின் முற்பாதியிலேயே ஸ்பர்ஸ் குழுவின் ஹேரி கேன் இரண்டு கோல்களை அடித்தார். பிற்பாதியின் தொடக்கத்தில் ஹியூங் மின் சோன் மேலும் ஒரு கோலை அடிக்க, ஸ்பர்சின் வெற்றி உறுதியானது.
ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ராப் ஹோல்டிங் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று திடலைவிட்டு வெளியேறியதால் எஞ்சிய ஆட்டத்தை ஆர்சனல் பத்து வீரர்களுடன் ஆட வேண்டியதாயிற்று.
இதனையடுத்து, ஆர்சனல் 66 புள்ளிகளுடன் பட்டியலின் 4ஆம் இடத்திலும் ஸ்பர்ஸ் 65 புள்ளிகளுடன் ஐந்தாம் நிலையிலும் உள்ளன.
இன்னும் இரு ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆர்சனல் இம்முறையேனும் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் கடைசி ஆட்டம் வரை தவிப்பிலேயே இருக்கும் நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
போட்டிக்குப்பின் பேசிய ஆர்சனல் நிர்வாகி அர்டேட்டா, தங்களது அழகான ஆட்டத்தை நடுவர்கள் அலங்கோலப்படுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். "நான் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது போன்று உணர்கிறேன்," என்றார் அவர்.
ஆனால், அர்டேட்டா அளவிற்கு அதிகமாகக் குறைகூறுகிறார் என்றும் அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது என்றும் ஸ்பர்ஸ் நிர்வாகி அன்டோனியோ கோன்டே கூறியுள்ளார்.