சதுரங்கம்: உலக வெற்றியாளரை இருமுறை வென்ற பிரக்ஞானந்தா
சென்னை: செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற இணைய அதிவேக சதுரங்கப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்துகொண்டு சதுரங்கம் ஆடி வருகின்றனர்.
இந்தப் போட்டியின் 5வது சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா, உலக வெற்றியாளரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டி சமநிலையில் முடியுமோ என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 40வது சுற்றுக்குப் பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறு பிரக்ஞானந்தா வெற்றி பெற வழிவகுத்தது. கார்ல்சனின் தவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்
படுத்தி காய்களைச் சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
இவ்வாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டு 2வது முறையாக கார்ல்சனை அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டு:
பேட்மிண்டன் இறுதிச் சுற்றில் லோ
ஹனோய்: வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டனில் இறுதிச் சுற்றுக்கு தகுதுபெற்றுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கியன் இயூ.
நேற்று நடைபெற்ற பரபரப்பான ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் வியட்னாமின் நுயன் தியன் மின் என்பவரை 21-15, 10-21, 23-21 என மூன்று செட்களில் தோல்வியின் விளிம்பு வரை சென்று தப்பித்து வென்றுள்ளார் லோ.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் லோ.
நேற்றைய போட்டியில் லோ தமது வேகமான ஆட்டத்தால் தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்.
எனினும், லோ செய்த சிறு தவறுகளாலும் இரண்டாவது செட்டில் முனைப்புடன் நுயன் தியன் மின் விளையாடியதாலும் இரண்டாவது செட்டை வியட்னாமியரான நுயன் 21-10 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.
வெற்றியாளரை முடிவு செய்வதற்கான மூன்றாவது செட்டில் நடுவரின் பல முடிவுகள் லோவுக்கு எதிராக இருப்பினும், இறுதியில் லோ வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.