பாரிஸ்: ரியால் மட்ரிட்டின் எதிர்பார்ப்பை மீண்டும் தகர்த்துள்ளார் கிலியான் எம்பாப்பே, 23.
ரியால் மட்ரிட்டின் அழைப்பை ஏற்று அந்த அணியுடன் இணைவார் என்று உலக காற்பந்து ரசிகர்கள் கருதி இருந்த நிலையில், பிஎஸ்ஜி அணியிலேயே 2025 ஆண்டு வரை தொடர்ந்து நீடிக்கும் வகையில் சனிக்கிழமை மூன்றாண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் எம்பாப்பே.
இதனால், அவரை விடாமல் துரத்தி வந்த 13 முறை ஐரோப்பிய சாம்பியனான மட்ரிட் ஏமாற்ற மடைந்தது.
பிரான்சின் முன்னணி பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட்- ஜெர்மைன்) அணிக்காக 2018ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் இவர், புதிய ஒப்பந்தம் தமக்குப் பெருமகிழ்ச்சி தருவதாகக் கூறினார். பிஎஸ்ஜியுடனான இவரது தற்போதைய ஒப்பந்தம் அடுத்த மாதம் காலாவதியாகிறது.
பிரான்ஸ் லீக்-1 போட்டியில் மெட்ஸ் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற பின்னர் இவரது புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்து பிஎஸ்ஜியின் வெற்றிக்குப் பாதை போட்டார் எம்பாப்பே.
பிரான்சுக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்து உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழும் இவர், "பிரான்சிலேயே தொடர்ந்து நீடிப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாரிஸ் எனது சொந்த நகரம் என்பதை நான் எப்போதும் சொல்லி வந்துள்ளேன்," என்று பிஎஸ்ஜியில் நீடிப்பது குறித்து கூறினார்.
"விளையாடி வெற்றிக்கிண்ணங்களை வெல்வதற்காக நான் எதை அதிகமாக நேசித்தேனோ அதனையே இனியும் தொடருவேன்," என்றார் எம்பாப்பே.
இவரது புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை பிஎஸ்ஜி குழுத் தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிவித்தார்.
"எம்பாப்பே நம்முடன் 2025ஆம் ஆண்டு வரைத் தொடரப்போகிறார் என்ற நல்ல செய்தியைத் தெரிவிக்கிறேன்," என அவர் கூறியதும் கூடியிருந்த ரசிகர்கள் எம்பாப்பே பெயரை மீண்டும் மீண்டும் உரக்கக் கூறி மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
"பிஎஸ்ஜியைப் பிரதிநிதிப்பதற்கான எம்பாப்பேயின் கடப்பாடு நமது குழுவின் வரலாற்றில் அற்புதமானதொரு மைல்கல்," என்றார் நாசர்.
லயனல் மெஸ்ஸி, ஜூனியர் நெய்மர் ஆகிய முன்னணி வீரர் களும் பிஎஸ்ஜி அணியில் உள்ளார்கள்.