சிங்கப்பூர்: நீர்ப்பந்து விளையாட்டுக்கான இன்டர் நேஷன்ஸ் கிண்ணம் 2022 போட்டியில் சிங்கப்பூர் அணி இந்தோனீசிய அணியை 16-2 கோல் கணக்கில் தோற்கடித்தது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 27 தங்கப்பதக்கங்களை வென்ற வரலாறு கொண்ட குடியரசின் நீர்ப்பந்துக் குழு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்டர் நேஷன்ஸ் நீர்ப்பந்துப் போட்டியில் பங்கேற்றது. இம்முறை இந்த விளையாட்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.
இருப்பினும் இந்த வட்டாரத்தில் தாங்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதை சிங்கப்பூர் வீரர்கள் நிரூபித்துள்ளனர்.
சிங்கப்பூர் ஏ அணி நேற்று இந்தோனீசியாவை 16-2 கோல் கணக்கில் வீழ்த்தியது. ஏற்கெனவே தாய்லாந்து, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய அணிகளையும் வென்ற சிங்கப்பூர் ஏ அணி, மொத்தம் 81 கோல்களைப் போட்டது.