மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் மாபெரும் வெற்றியாளராக மான்செஸ்டர் சிட்டி நேற்று முன்தினம் வாகை சூடியது.
லீக் போட்டியில் தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை அது சந்தித்தது.
ஆட்டத்தை 3-2 எனும் கோல் கணக்கில் கைப்பற்றிய சிட்டி, லீக் பட்டியலில் தன்னை விரட்டிவந்து நெருக்குதல் கொடுத்த லிவர்பூலை ஓரங்கட்டியது.
ஆனால் சிட்டிக்கு இந்த வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. வெற்றிக்குக் குறிவைத்து விளையாடத் தொடங்கிய சிட்டி ஆட்டக்காரர்களுக்குப் பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
ஆட்டத்தின் 37, 69வது நிமிடங்களில் வில்லா கோல் போட்டு 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இனி பட்டம் லிவர்பூலுக்குத்தான் சொந்தம் என்று பரவலாகப் பேசப்பட்டபோது விட்டுக்கொடுக்காமல் விளையாடிய சிட்டி அடுத்தடுத்து கோல்களைப் போட்டு கதையை அப்படியே புரட்டிப்போட்டது.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய பெருமை சிட்டியின் இல்கே குண்டொகனைச் சேரும்.
பெர்னாடோ சில்வாவுக்காக மாற்று ஆட்டக்காரராக அவர் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் அவர் சிட்டியின் முதல் கோலைப் போட்டார். அவர் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டதும் சிட்டி ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது.
இரண்டு நிமிடங்கள் கழித்து சிட்டியின் ரோட்ரி அனுப்பிய பந்து வலைக்குள் புகுந்து ஆட்டத்தைச் சமன்செய்தபோது சிட்டியின் எட்டிஹாட் விளையாட்டரங்கம் அதிர்ந்தது.
வெற்றி வாய்ப்பு தொடும் தூரத்தில் இருப்பதை உணர்ந்த சிட்டி ஆட்டக்காரர்கள் தாக்குதலில் தீவிரம் காட்டினர்.
முனைப்பு காட்டிய சிட்டியைக் கண்டு வில்லா ஆட்டக்காரர்கள் ஆட்டங்கண்டனர்.
இந்நிலையில், 81வது நிமிடத்தில் குண்டொகன் சிட்டியின் வெற்றி கோலைப் போட்டார்.
மாபெரும் வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் மிகக் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி உலகெங்கும் உள்ள சிட்டி ரசிகர்களைக் கொண்டாட்ட மழையில் நனைய வைத்தது.
"இன்று களமிறங்கி சிட்டிக்கு வெற்றியைத் தேடித் தந்த அனைத்து ஆட்டக்காரர்களும் சகாப்தங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை கிண்ணத்தை ஏந்தியுள்ளனர். இது அவர்களுடைய உயர்தரத்தையும் அசாத்திய திறனையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் என்றென்றும் அனைவரின் நினைவில் இருப்பர்," என்று வெற்றி பெற்ற பெருமிதத்துடன் தமது ஆட்டக்காரர்களுக்குப் புகழாரம் சூட்டினார் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா.