பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ரியால் மட்ரிட் வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தியது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் லிவர்பூலை அது 1-0 எனும் கோல் கணக்கில் தோற்
கடித்தது.
ஆனால் ஆட்டம் தொடங்கியதிலிருந்து லிவர்பூல் குழுதான் ஆதிக்கம் செலுத்தியது.
தாக்குதல் மேல் தாக்குதல் நடத்திய லிவர்பூல் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது.
சில வாய்ப்புகளை அது நூலிழையில் தவறவிட்டது.
ஆனால் லிவர்பூல் ஒரு கோல்கூட போட முடியாமல் தோல்வியின் பிடியில் சிக்கிக்கொண்டதற்கு
முக்கிய காரணமாக ரியாலின் கோல்காப்பாளர் கோட்வா விளங்கினார்.
இடைவேளையின்போது கோல் ஏதுமின்றி இரு குழுக்களும் சமநிலையில் இருந்தன.
பிற்பாதி ஆட்டத்திலும் தாக்குதலில் லிவர்பூல் தொடர்ந்து தீவிரம் காட்டியது.
ஆனால் கடுகளவும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய கோட்வா, எதிரணியின் கோல் முயற்சிகள் அனைத்தையும்
தவிடுப்பொடியாக்கினார்.
இந்நிலையில், ஆட்டத்தின் போக்குக்கு மாறாக 59வது நிமிடத்தில் ரியால் மட்ரிட் கோல்
போட்டது.
கோல் போட தனக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தி அது பந்தை வலைக்குள் அனுப்பியது.
தாக்குதலில் அதிக கவனம் செலுத்திய லிவர்பூல் சற்று அசந்த நேரம் பார்த்து ரியாலின் வினிசியஸ் ஜூனியர் கோல் போட்டார்.
அதை அடுத்து, ஆட்டத்தைச் சமன் செய்ய லிவர்பூல் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய அக்குழுவின் ஆட்டக்காரர்கள் விரக்தி
அடைந்தனர்.
குறிப்பாக, லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் மிகச் சிறப்பாக விளையாடி கோல்
வேட்டையில் தீவிரமாக இறங்கியபோதிலும் அதிர்ஷ்ட தேவதை அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது, என்ன செய்தாலும் தடைக்கல்லாக, மிகப் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்த கோட்வாவை அவரால் முறியடிக்கவும் முடியவில்லை.
இறுதி வரை முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்ட ரியால் கிண்ணத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது.
ரியாலின் இந்த வெற்றியின் மூலம், நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணதக்தை வென்ற முதல் பயிற்றுவிப்பாளர் எனும் பெருமை அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்சிலோட்டியைச் சேரும்.
ஏசி மிலான், ரியால் மட்ரிட் ஆகிய குழுக்களின் பயிற்றுவிப்பாளர் என்கிற முறையில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை அவர் தலா இரண்டு முறை வென்றுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் ரியால் மட்ரிட் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பின் வார்த்தைகளில் அக்குழுவின் மனவேதனை எதிரொலித்தது.
"மிகச் சிறப்பாக விளையாடி னோம். ஆனால் திட்டமிட்டப்படி எங்களால் விளையாட முடியாமல் போனது. எப்படி இருந்தாலும் நாங்கள் நினைத்தது போல செயல்பட்டிருக்க முடியாது.
"இதற்கு ரியாலின் வியூகம் காரணம். தற்காப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் ரியால் வியூகம் வகுத்திருந்தது. தற்காப்புப் பணியில் அது பல ஆட்டக்காரர்களை ஈடுபடுத்தியது.
"அத்தகைய சூழலில் தாக்குதல்கள் நடத்துவது எளிதல்ல. அதையும் மீறி நாங்கள் கோல் வேட்டையில் இறங்கினோம். ஆனால் இலக்கை அடையத் தவறிவிட்டோம்," என்று கிளோப் தெரிவித்தார்.
இந்த இறுதி ஆட்டம் முதலில் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆட்டம் பாரிசில் நடைபெற்றது.
பாதுகாப்பு நடவடிக்கை:தாமதமாகத் தொடங்கிய ஆட்டம்
எதிர்பாராத விதமாக பாதுகாப்பு தொடர்பான விவகராங்கள் எழுந்ததால் இறுதி ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தொடங்காமல் ஏறத்தாழ 36 நிமிடங்கள் கழித்து ஆட்டம் தொடங்கியது.
விளையாட்டரங்கத்துக்குள் ரசிகர்கள் சிலர் முண்டியடித்துக்கொண்டு வர முயன்றதால் இந்நிலை ஏற்பட்டதாக பிரெஞ்சு காவல்துறை கூறியது.

