வியேன்னா: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஆஸ்திரியாவும் பிரான்சும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கி ஆட்டத்தின் கடைசிக்
கட்டத்தில் பிரான்சின் கிலியன் எம்பாப்பே மட்டுமே கோல் போடாமல் இருந்தால் ஆஸ்திரியா வெற்றி பெற்றிருக்கும்.
இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டதன்மூலம் அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரான்சுக்கு இருக்கிறது.
முற்பாதி ஆட்டத்தில்
ஆஸ்திரியாவின் ஆண்ட்ரியஸ் வெய்மான் கோல் போட்டு தமது அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆனால் ஆட்டம் முடிய கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தபோது எம்பாப்பே அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
இதுவரை மூன்று ஆட்டங்களில் களமிறங்கியுள்ள பிரான்ஸ் குருப் 1ல் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் டென்மார்க் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவும் மூன்றாவது இடத்தில் குரோவேஷியாவும் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன.
"பிரான்ஸ் மேலும் பல கோல்களைப் போட்டிருக்க வேண்டும். கோல் போட எங்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை நழுவவிட்டோம். இது எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று பிரான்ஸ் குழுவின்
பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோம்
தெரிவித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க்கை 1-0 எனும் கோல் கணக்கில் குரோவேஷியா வீழ்த்தியது.
பிற்பாதி ஆட்டத்தில் மாரியோ பசலிச் போட்ட கோல் குரோவேஷியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இப்போட்டியில் டென்மார்க் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்காப்பில் சக்கைபோடு போட்ட குரோவேஷிய குழு, சிறப்பாக விளையாடி கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வெற்றியைப் பதிவு செய்துகொண்டது.
ஆட்டத்தின் 69 நிமிடத்தில் குரோவேஷியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் அனுப்பப்பட்ட பந்தை வலைக்குள் சேர்த்தார் பசலிச்.