புதுடெல்லி: ஜப்பான் தலைநகர் தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
மகளிர் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி உச்சத்தை எட்டும் என்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநரும் ஒடிசா ஹாக்கி சம்மேளன இயக்குநருமான டேவிட் ஜான் தெரிவித்துள்ளார்.
தற்போது அணியில் உள்ள ஜூனியர் ஹாக்கி வீர்ர்கள், 2028ஆம் ஆண்டுக்குள் 300 அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள் என்றும் இதன் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் அதிக அனுபவம் கிடைக்கும் என்றும் டேவிட் ஜான் கூறினார்.
இதனால் எந்தவொரு
சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஹாலந்து ஹாக்கி அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய மகளிர் அணியும் பதக்கத்துக்குக் குறிவைத்துள்ளது.

