மான்செஸ்டர்: மகளிருக்கான ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு
சுவீடன் தகுதிபெற்றுள்ளது.
காலிறுதி ஆட்டத்தில் மிகக் கடுமையாகப் போராடி ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் கோல் போட்டு 1-0 எனும் கோல் கணக்கில் பெல்ஜியத்தை சுவீடன் மகளிர் வீழ்த்தினர்.
நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இங்
கிலாந்தை அவர்கள் எதிர்கொள்வர். தற்காப்பில் கவனம் செலுத்தி திடீர் தாக்குதல்களை நடத்தும் உத்தியை பெல்ஜியம் கையாண்டது. இதனால் கோல் போட
சுவீடன் சிரமப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி, ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியும் சுவீடன் மகளிரால் கோல் போட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் சுவீடன் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இருப்பினும், ஆஃப்சைட் காரணமாக அது
நிராகரிக்கப்பட்டது.
பிற்பாதி ஆட்டத்திலும் சுவீடன் தாக்குதலில் தீவிரம் காட்டியது.
இருப்பினும், பெல்ஜியம் மகளிரின் தற்காப்பு அரண் பிடிவாத
மாக நிற்க, ஆட்டத்தின் வெற்றியாளரைக் கூடுதல் நேரம் அல்லது பெனால்டிகள் மூலம்தான்
நிர்ணயிக்க முடியும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால் கூடுதல் நேரத்துக்குச் செல்ல விரும்பாத சுவீடன், அதற்கு முன்னதாகவே வெற்றிக் கனியைப் பறித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தது.
ஆட்டத்தின் கடைசி வினாடிகளில் சுவீடனுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
பெல்ஜியத்தின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்து சுவீடனின் தற்காப்பு ஆட்டக்காரர் லின்டா செம்பிரான்ட்டிடம் சென்றது. பெல்ஜியம் ஆட்டக்காரர்கள் நெருங்குவதற்குள் சுவீடனின் வெற்றி கோலை அவர் போட்டார்.

