பர்மிங்ஹம் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் டியோங் சென் வெய் தகுதி பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையுறுதிச் சுற்றில் பந்தயத்தை ஆக விரைவாக முடித்த வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 மீட்டர் பந்தயத்தை அவர் 23.24 வினாடிகளில் முடித்தார். அப்பட்டியலில் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்தின் பெஞ்சமின் பிரவுட் முதல் இடத்தையும் டிரினிடாட் அண்ட் டொபாகோவின் டிலன் கார்ட்டர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இறுதிச் சுற்றில் இதே நிலை நீடித்தால் 24 வயது டியோங் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியை முடிக்க டியோங் இதைவிட சிறப்பாக 23.03 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார்.
இறுதிச் சுற்று சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணி அளவில் நடைபெற்றிருக்கும்.
அரையிறுதிச் சுற்றில் மின்னல் வேகத்தில் நீந்தி முடித்த சிங்கப்பூர் வீரர் டியோங் சென் வெய் (இடது).
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

