லிவர்பூல்: புதிய இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்துப் பருவத்தில் தொடர் தடுமாற்றத்தைத் தவிர்க்கும் முயற்சியில் லிவர்பூல் இறங்கியுள்ளது.
எதிர்பார்ப்புகளுக்கு மாறாக லிவர்பூலுக்கும் ஃபுல்ஹேமுக்கும் இடையே நடைபெற்ற இப்பருவத்தின் முதல் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போட்டு தனது அணியைத் தோல்வியின் விளிம்பிலிருந்து காப்பாற்றினார் நட்சத்திரம் மோ சாலா.
சிங்கப்பூர் நேரப்படி நாளை பின்னிரவு தனது இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் கிரிஸ்டல் பேலஸ் அணியுடன் மோதவுள்ளது. முதல் ஆட்டத்தில் விளையாடியதைப் போல் கவனக்குறைவுடன் களமிறங்கினால் இதிலும் லிவர்பூல் கோட்டைவிட வாய்ப்புள்ளது.
பேலஸ் பொதுவாக சுமாராக ஆடும் அணியாக இருந்தாலும் அவ்வப்போது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய ஆற்றல் அதனிடம் உள்ளது. சென்ற பருவம் கிண்ணத்தை வென்ற மான்செஸ்டர் சிட்டி, லீக்கில் பேலசுடன் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் வெல்லத் தவறியது. அவற்றில் ஓர் ஆட்டத்தில் பேலஸ் வெல்லவும் செய்தது.
சென்ற வாரம் லிவர்பூல் விளையாடிய விதம் அதன் நிர்வாகி யர்கன் கிளாப்பிற்கு மிகுந்த அதிருப்தி அளித்தது.
"ஆட்டங்களை வெல்வது எங்களுக்கு முக்கியம்தான். வென்று மூன்று புள்ளிகளைப் பெறுவதை நான் விரும்புகிறேன். ஆனால் உண்மையைச் சொன்னால் சிறப்பாக விளையாடுவதையே நான் கூடுதலாக விரும்புகிறேன். அதை நாம் செய்யவில்லை," என்று கிளாப் ஃபுல்ஹமுக்கு எதிரான ஆட்டத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.
பல ஆண்டுகளாக லீக்கில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாதிருந்த லிவர்பூல் கிளாப்பின் தலைமையில் புத்துயிர் பெற்று ஐரோப்பாவின் ஆகச் சிறந்த அணிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. மீண்டும் பழைய நிலை திரும்பிவிடுமா என்ற அச்சம் தலைதூக்காமல் இருக்க லிவர்பூல் பேலசை வெல்வது முக்கியம்.
இவ்விரு அணிகளும் மோதும்போது பல வேளைகளில் நிறைய கோல்கள் விழுந்திருக்கின்றன, எதிர்பாராத திருப்பங்களும் நிகழ்ந்துள்ளன.