பாரிஸ்: அர்ஜென்டினாவின் நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதுக்கு முன்மொழியப்படவில்லை. பேலன் டி'ஓர் எனறழைக்கப்படும் இவ்விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ள 30 வீரர்களில் மெஸ்ஸி இடம்பெறவில்லை.
2006ஆம் ஆண்டிலிருந்து இவ்விருதுக்குத் தொடர்ந்து முன்மொழியப்பட்டவர் மெஸ்ஸி. மேலும், 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பேலன் டி'ஓர் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் ஒன்றை வகித்து வந்தார்.
2018ஆம் ஆண்டு மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.
சென்ற ஆண்டுக்கான பேலன் டி'ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, 2007ஆம் ஆண்டிலிருந்து இவ்விருதை ஏழு முறை கைப்பற்றியிருக்கிறார். காற்பந்து வரலாற்றில் பேலன் டி'ஓர் விருதை ஆக அதிக முறை வென்றவர் மெஸ்ஸி.
இளம் வயதிலிருந்தே ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் முத்திரை பதித்து நட்சத்திரமாக உருவெடுத்த 35 வயது மெஸ்ஸி சென்ற பருவம் பிரான்சின் பிஎஸ்ஜி எனப்படும் பாரிஸ் செயின்ட் ஜெமேன் அணியில் சேர்ந்தார். பிஎஸ்ஜியில் அவராால் இதுவரை அதிகம் சோபிக்கமுடியவில்லை.
அதுவே மெஸ்ஸி பேலன் டி'ஓர் விருதுக்கு முன்மொழியப்படாததற்கு முக்கியக் காரணம்.
பிஎஸ்ஜியின் மற்றொரு நட்சத்திரமான பிரேசிலின் நேமாரும் முன்மொழியப்படவில்லை.
இவ்வாண்டு விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளோரில் முன்னணி வகிப்பவர் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் அணியின் பிரெஞ்சு நட்சத்திரம் கரீம் பென்ஸீமா. முதன்முறையாக பேலன் டி'ஓர் விருதை வெல்வது பென்ஸீமாவின் இலக்கு.
ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் அணியில் பிரபலமடைந்து அண்மையில் பார்சிலோனாவில் சேர்ந்த போலந்து நட்சத்திரம் ராபர்ட் லெவண்டொவ்ஸ்கியும் முன்மொழியப்பட்டுள்ளார். சென்ற ஆண்டின் பேலன் டி'ஓர் விருது லெவண்டொவ்ஸ்கிக்கு வழங்கப்படாதது பலருக்கு அதிருப்தி அளித்தது.
மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக விருதை ஆக அதிக முறை வென்றிருக்கும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இம்முறையும் முன்மொழியப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை மெஸ்ஸி அல்லது ரொனால்டோதான் இவ்விருதை வென்று வந்தனர்.
2008ஆம் ஆண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்தபோது ரொனால்டோ முதன்முறையாக பேலன் டி'ஓர் விருதை வென்றார். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிகளுக்கு விளையாடிய வீரர்கள் யாரும் விருதை வென்றதில்லை.
சென்ற ஆண்டு மீண்டும் யுனைடெட்டில் சேர்ந்தார் 37 வயது ரொனால்டோ. இவ்வாண்டுக்கான பேலன் டி'ஓர் விருதை அவர் கைப்பற்றினால் 14 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் வீரர் ஒருவர் விருதை வென்றதாக இருக்கும்.
எனினும், பென்ஸீமாதான் இவ்வாண்டுக்கான விருதை வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு நிகழ்ந்தால் அது மெஸ்ஸி, ரொனால்டோ சகாப்தம் நிறைவுக்கு வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பேலன் டி'ஓர் விருது: 16 ஆண்டுகளில் காணாத அபூர்வ நிகழ்வு