மும்பை: ஓய்வில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி இம்மாதம் தொடங்கவிருக்கும் ஆசிய கிண்ணத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டார். அண்மையில் இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இடம்பெற்ற தொடரில் கோஹ்லி பங்கேற்கவில்லை.
கடந்த சுமார் இரண்டு நாள்களாக 'பிகேசி' எனப்படும் பாண்டிரா-குர்லா நிலையத்தில் இருக்கும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் உள்ளரங்கு கிரிக்கெட் கழகத்தில் முன்னாள் இந்திய அணித்தலைவரான கோஹ்லி பயிற்சி செய்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தான் விளையாடும் இந்திய பிரிமியர் லீக் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள், அணியின் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பங்கார் ஆகியோருடன் கோஹ்லி பயிற்சியில் ஈடுபட்டார்.
தான் மேற்கொண்ட பயிற்சியைக் காணொளியாகப் பதிவுசெய்து கடந்த வியாழக்கிழமையன்று அதை இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் கோஹ்லி. எதிர்பார்த்தபடி அந்தக் காணொளி பலரால் பகிரப்பட்டது.
எதிர்பார்த்த வண்ணம் விளையாடாததால் அண்மைக் காலமாக பலரின் கண்டனத்திற்கு ஆளானார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் ஒன்றரை மணிநேரத்துக்குப் பயிற்சி செய்தார் கோஹ்லி.
ஆசிய கிண்ணத்தின் 20 ஓவர் ஆட்டங்களைக் கொண்ட போட்டியில் பல தரப்பினரின் கவனம் கோஹ்லி மீது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 இந்திய அணியில் தனது இடத்தை மீட்டுக்கொள்ள கோஹ்லி மீது நெருக்குதல் இருந்து வருகிறது.
டி20 ஆசிய கிண்ணத்தில் இந்தியாவும் அதன் பரம வைரியான பாகிஸ்தானும் மூன்று முறை மோதக்கூடும்.
ஆசிய கிண்ணம் இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடைபெறும்.