சவுத்ஹேம்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மான்செஸ்டர் யுனைடெட். நேற்று சவுத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது மான்செஸ்டர் யுனைடெட்.
லிவர்பூல் அணியை சென்ற வாரம் வென்ற மான்செஸ்டர் யுனைடெட் அதைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்வதை தமது குழு உறுதி செய்ய வேண்டும் என்று யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது.
முற்பாதி ஆட்டம் கோல் எதுவும் விழாமல் முடிந்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் புருனோ ஃபெர்னாண்டஸ் கோல் போட்டு மேன்யூவிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
முன்னதாக, ஆண்டனி எலங்கா உதைத்த பந்தைக் கோலாகாமல் தடுத்துவிட்டார் சவுத்ஹேம்டன் கோல்காப்பாளர் கேவின் பஜுனு.
மேன்யூ வீரர் கிறிஸ்டியன் எரிக்சனின் கோல் முயற்சியை மத்திய திடல் வீரர் அர்மெல் பெல்லா கோட்சாப் தடுத்தார்.
60 மில்லியன் பவுண்டுக்கு ரியால் மட்ரிட் குழுவில் இருந்து மேன்யூவிற்கு வந்த கேசிமரோ இந்த ஆட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கினார்.

