லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களில் ஆஸ்டன் வில்லாவும் ஃபுல்ஹமும் வெற்றியைப் பதிவு செய்து தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன.
சவுத்ஹேடனுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா வெற்றி பெற்றது.
கடந்த நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் ஏற்பட்ட தவிப்புக்கு இந்த வெற்றி முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
வில்லாவின் வெற்றி கோலை ஜேகப் ரேம்சே போட்டார். இதுவே வில்லாவுக்காக இப்பருவத்தில் அவர் போட்ட முதல் கோலாகும்.
இந்த கோலை அவர் 41வது நிமிடத்தில் போட்டார். ஆட்டத்துக்கு முன்பு அண்மையில் காலமான எலிசபெத் அரசியாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு, அரசியாராக அவர் 70 ஆண்டுகளுக்குப் பதவி வகித்ததைக் கௌரவிக்கும் வகையில் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் 'காட் சேவ் தி குவீன்' என விளையாட்டரங்கத்தில் கூடியிருந்தோர் பாடினர்.
மற்றோர் ஆட்டத்தில் நாட்டின்ஹம் ஃபாரஸ்ட் குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் ஃபுல்ஹம்
வீழ்த்தியது.
ஆட்டத்தில் முன்னிலை வகித்து, சாதகநிலையை நழுவவிட்டு தோற்கும் பழக்கம் ஃபாரஸ்ட் குழுவை விட்டுச் செல்வதாக இல்லை. இவ்வாறு இரண்டாவது முறையாக அது தோல்வியின் பிடியில் சிக்கி
உள்ளது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கோல் போட்டு ஃபாரஸ்ட் முன்னிலை வகித்தது. ஆனால், மனந்தளராமல் விளையாடிய ஃபுல்ஹம் அடுத்தடுத்து கோல்
களைப் போட்டு 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 77வது நிமிடத்தில் ஃபாரஸ்ட் தனது இரண்டாவது கோலைப் போட்டது.
ஆனால், அக்குழுவால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போக, ஃபுல்ஹம் வாகை சூடியது.