லண்டன்: உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் ஆட்டக்காரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 41, அவ்விளையாட்டில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.
திடலில் தமது நீண்டகால எதிரியாக விளங்கிய ஸ்பெயினின் ரஃபாயல் நடாலுடன் இணைந்து நேற்று முன்தினம் பங்கேற்ற லேவர் கிண்ண இரட்டையர் ஆட்டமே ஃபெடரரின் கடைசி ஆட்டமாக அமைந்தது.
ஐரோப்பியக் குழுவிற்காக இணைந்து ஆடிய இவர்கள், உலகக் குழுவின் ஃபிரான்சிஸ் டியஃபோ-ஜேக் சாக் இணையிடம் 6-4, 6-7, 9-11 என்ற செட் கணக்கில் தோற்றுப்போயினர்.
லண்டனின் ஓ2 அரங்கில் நடந்த இந்த ஆட்டத்திற்கான 17,500 நுழைவுச்சீட்டுகளும் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முழங்கால் காயம் காரணமாக 2021 விம்பிள்டன் பொது விருதுப் போட்டிக்குப் பிறகு ஃபெடரர் விளையாடியது இதுவே முதன்முறை.
"இது அற்புதமான நாளாக அமைந்தது. நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன். மிகுந்த நெருக்கடியாக உணரவில்லை. சிறந்த விளையாட்டாளர்களுக்கு, சகாப்தங்களுக்கு முன்பாக நடாலுடன் இணைந்து ஆடியது மிக்க மகிழ்ச்சி தருகிறது," என்றார் ஃபெடரர்.
இதுநாள்வரை தமக்குப் பேராதரவாக விளங்கிய தம் மனைவிக்கும் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட ஃபெடரர், "இது ஒரு கொண்டாட்டம்போல் தோன்றுகிறது. இது ஓர் அற்புதமான பயணம்," என்றும் சொன்னார்.
திடலில் தங்களது ஆட்டமுறை முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிட்ட நடால், ஆனாலும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு இடையிலான உறவுமுறை நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது என்றும் சொன்னார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றோர் பட்டியலில் ஃபெடரர் (20) மூன்றாம் நிலையில் இருக்கிறார். நடால் (22) முதலிடத்திலும் ஜோக்கோவிச் (21) இரண்டாமிடத்திலும் உள்ளனர்.