மெல்பர்ன்: கடந்த சில வாரங்களாக நீடித்த கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கம் இன்று தீரவுள்ளது. இவ்வாண்டின் ஆண்கள் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இன்று நடைபெறவுள்ள தகுதிச் சுற்று ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இலங்கையும் நமிபியாவும் களமிறங்குகின்றன.
அண்மையில் ஆசிய கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை படிப்படியாக முன்னேறியுள்ளது. யாரும் எதிர்பாராத வண்ணம் இலங்கை டி20 உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடும் என்று சில தரப்பினர் கருதுகின்றனர்.
'ஏ' பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் நெதர்லாந்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் மோதுகின்றன. 'பி' பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸிம்பாப்வே ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்விரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.
ஏற்கெனவே 'சூப்பர் 12' சுற்றுக்குத் தகுதிபெற்ற எட்டு அணிகளில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அடங்கும். 'சூப்பர் 12' சுற்றின் இரண்டாம் பிரிவில் இடம்பெறும் இவ்விரு அணிகளும் இம்மாதம் 23ஆம் தேதியன்று மோதும்.
அந்த ஆட்டத்தில் விளையாடவுள்ள வீரர்களை இப்போதே தேர்ந்தெடுத்துவிட்டதாக இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அணியை நன்கு தயார்ப்படுத்த முன்னதாகவே முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
'சூப்பர் 12' இரண்டாம் பிரிவில் இவ்விரு அணிகளுடன் தற்போதைக்கு பங்ளாதேஷும் தென்னாப்பிரிக்காவும் இடம்பெறுகின்றன. முதல் பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவை உள்ளன.
இதற்கிடையே, டி20 ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணித் தலைவர்களும் ஒன்றுகூடியுள்ளனர். டி20 உலகக் கிண்ணப் போட்டியைத் தொடங்கிவைக்கும் நிகழ்வாக 'கேப்டன்ஸ் டே' எனப்படும் 'அணித்தலைவர் தினம்' மெல்பர்னில் கொண்டாடப்பட்டது.

