லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டியை கோல் போடவிடக்கூடாது என்ற முடிவுடன் விளையாடியது லெஸ்டர்.
ஆனால், அதிரடியாக கோல் போட்டு லெஸ்டர் குழுவை மண்ணைக் கவ்வச்செய்தார் மான்செஸ்டர் சிட்டியின் கெவின் டி பிரய்ன.
ஆட்டத்தின் பெரும்பகுதி சிட்டியின் ஆதிக்கத்தில் இருந்தபோதும் அக்குழுவால் கோல் போடமுடியவில்லை.
காயம் காரணமாக எர்லிங் ஹாலண்ட் விளையாட முடியாமல் போனதும் சிட்டி குழுவிற்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது.
லெஸ்டரும் எதிரணியைத் தடுப்பதிலேயே கவனமாக இருந்தது. எனவே, முற்பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.
பிற்பாதி ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீகிக் வாய்ப்பில் கெவின் டி பிரய்ன போட்ட அபராமான கோல் சிட்டியை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெறச் செய்தது.
சிட்டியின் கோலைச் சமன் செய்யும் லெஸ்டரின் முயற்சி பலனளிக்கவில்லை.
53வது நிமிடத்தில் லெஸ்டர் வீரர் யூரி உதைத்த பந்து கோல்கம்பத்தில் பட்டுத் திரும்பியது.
லெஸ்டர் வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் திறம்படச் செயல்பட்ட தாக அதன் நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ் பாராட்டினார்.

