தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை போர்ச்சுகல். இருமுறை அரையிறுதிச் சுற்றுவரை சென்றிருக்கிறது.
இவ்வாண்டின் போட்டியில் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய விளையாட்டாளர்கள் போர்ச்சுகலிடம் உள்ளனர். எனினும், அதன் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவைச் சூழ்ந்திருக்கும் பெரும் சர்ச்சை அணியின் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. அண்மைக் காலமாக அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடவும் இல்லை. 37 வயது ரொனால்டோவிற்கு உலகக் கிண்ணத்தை வெல்ல இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம்.
அவரை மையமாகக் கொண்டுதான் இந்த போர்ச்சுகல் அணி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பென்ஃபிக்காவின் கொன்சாலோ ராமோஸ் உள்ளிட்ட வளர்ந்துவரும் நட்சத்திரங்கள் ரொனால்டோவின் இடத்தைப் பிடிக்கக்கூடியவர்கள். அட்லெட்டிக்கோ மட்ரிட்டின் ஜோவாவ் ஃபெலிக்சும் சிறப்பாக விளையாடக்கூடியவர்.
2002ஆம் ஆண்டுப் போட்டியில் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டிருந்த போர்ச்சுகல் முதல் சுற்றைத் தாண்டத் தவறியது. அதற்குப் பிறகு அதிக நட்சத்திரங்கள் இல்லாமலேயே 2016ஆம் ஆண்டு முதன்முறையாக யூரோ கிண்ணத்தை வென்றது. அக்கிண்ணத்தை வென்றுதந்த பயிற்றுவிப்பாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸ்தான் இன்றும் போர்ச்சுகலை வழிநடத்துகிறார்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றில் போர்ச்சுகல் 'எச்' பிரிவில் களமிறங்கவுள்ளது. கானா, தென்கொரியா, உருகுவே ஆகிய அணிகளும் அப்பிரிவில் உள்ளன.
போர்ச்சுகல் எளிதில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இதர மூன்று அணிகளையும் குறைத்து மதிப்பிடமுடியாது.

