சோல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ஆகச் சிறப்பாகச் செய்துள்ள ஆசிய அணி தென்கொரியா. 2002ஆம் ஆண்டுப் போட்டியில் சொந்த மண்ணில் தென்கொரியா அரையிறுதிச் சுற்றுவரைச் சென்றது. அதிலும் அப்போட்டியில் இத்தாலிக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் தென்கொரியாவின் ஆன் ஜுன்-ஹுவாங் வெற்றி கோலைப் போட்டது ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தது.
தென்கொரியா என்றாலே 2002ஆம் ஆண்டுப் போட்டிதான் நினைவுக்கு வரும்.
எனினும், அந்நிகழ்வை நினைவுகூராமல் புதியதொரு வரலாற்றைப் படைக்குமாறு தென்கொரிய அணியைக் கேட்டுக்கொண்டுள்ளார் அதன் முன்னாள் நட்சத்திரம் கூ ஜா-சியோல்.
"மக்களுக்கு அது மிகச் சிறந்த அனுபவம்தான். எனினும், விளையாட்டாளர்களைப் பொறுத்தவரை அந்த சாதனை நெருக்குதல் அளிக்கிறது என்பது எனது கருத்து," என்றார் 2014ஆம் ஆண்டுப் போட்டியில் தென்கொரியாவின் அணித்தலைவராகவும் இருந்த கூ.
2010ஆம் ஆண்டுப் போட்டிக்குப் பிறகு தென்கொரியா முதல் சுற்றைத் தாண்டவில்லை. அப்போட்டியில் தென்கொரியா இரண்டாம் சுற்றுவரை முன்னேறி உருகுவேயிடம் தோல்வியடைந்தது.
எனினும், சென்ற போட்டியில் நடப்பு வெற்றியாளர்கள் ஜெர்மனியை வென்று அந்த அணியை முதல் சுற்றிலேயே வெளியேற்றிய பெருமை தென்கொரியாவுக்கு உண்டு.
'2002 உலகக் கிண்ணப் போட்டியைப் பற்றி நினைக்கவேண்டாம்'

