மான்செஸ்டர்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு எதிராக வழக்குத் தொடர அவர் விளையாடும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எண்ணம் இல்லை; எனினும், குழுவிலிருந்து வெளியேற்றப்படும்போது அதை எதிர்க்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று யுனைடெட் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்துகளை ரொனால்டோ நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். யுனைெடட் நிர்வாகி எரிக் டென் ஹாக் உள்ளிட்டோரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அதைத் தொடர்ந்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக யுனைடெட் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. 37 வயது ரொனால்டோ யுனைடெட்டில் விளையாட வகைசெய்யும் ஒப்பந்தத்தை அக்குழு ரத்து செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவிருந்தது.
எனினும், இன்று தொடங்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டி நிறைவடைந்த பிறகு ரொனால்டோ குழுவில் மறுபடியும் சேரக்கூடாது என்பது யுனைடெட் நிர்வாகத்தினரின் முடிவு என்று தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு மீண்டும் யுனைடெட்டில் சேர்ந்த ரொனால்டோ கடந்த சில வாரங்களாக பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

