தோஹா: காற்பந்து உலகக் கிண்ணத்தை நான்கு முறை வென்றுள்ளது ஜெர்மனி. கிண்ணத்தை இரண்டாவது ஆக அதிக முறை வென்றிருக்கும் அணி இது.
எனினும், 2018ஆம் ஆண்டுப் போட்டியில் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர்களாகக் களமிறங்கியபோது முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டியிலும் காலிறுதிச் சுற்றைத் தாண்டத் தவறியது.
அந்த ஏமாற்றங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் போட்டியில் இழந்த பெயரை மீட்கும் முயற்சியில் இறங்கவுள்ளது ஜெர்மனி. 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சென்ற போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்றோரில் நால்வர் மட்டுமே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய வீரர்களுடன் அணி புத்துயிர் பெற்றிருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
அணித் தலைவரும் கோல் காப்பாளருமான மேனுவெல் நோயர், தாக்குதல் ஆட்டக்காரர் தாமஸ் முல்லர், நடுத்திடல் வீரர் மாரியோ கட்ஸ, தற்காப்பு ஆட்டக்காரர் மத்தாயஸ் கின்டர் ஆகியோர் மட்டுமே அணியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
'இ' பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் ஜெர்மனி இன்று ஜப்பானைச் சந்திக்கிறது. சென்ற போட்டியில் மற்றோர் ஆசிய அணியான தென்கொரியாதான் அதை எதிர்பாரா விதமாகப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. அப்படிப்பட்ட சூழலைத் தவிர்க்கவேண்டும் ஜெர்மனி.
காயமுற்றிருக்கும் ஜெர்மனியின் லீரோய் சானே இந்த ஆட்டத்தில் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜப்பான் இதுவரை இரண்டாம் சுற்றைத் தாண்டியதில்லை. ஏழு முறை உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெற்றது, மூன்று முறை இரண்டாம் சுற்றுவரை முன்னேறியது.
சென்ற போட்டியின் இரண்டாம் சுற்றில் பெல்ஜியத்தை 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்து காலிறுதிக்கு முன்னேறும் விளிம்பில் இருந்தது ஜப்பான். ஆனால் அபாரமாக மீண்டு வந்து 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது பெல்ஜியம்.

