தோஹா: வாழ்வில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அவற்றை முறியடித்து சாதனைகளாக மாற்றும் ஆற்றல் கொண்டவர் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி டென் ஹாக்கைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் அவர் அக்குழு
விலிருந்து நீக்கப்பட்டார்.
கவனச் சிதறல்களை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய சூழல் வேறோர் ஆட்டக்காரருக்கு ஏற்பட்டிருந்தால் அவரால் ஆட்டங்களில் கவனம் செலுத்தி இருக்க முடியாது.
ஆனால் ரொனால்டோ வேறு ரகம். அணித் தலைவர், நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் என்கிற முறையில், போர்ச்சுகல் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி, உலகக் கிண்ணப் போட்டி யில் அதன் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறச் செய்துள்ளார்.
'எச்' பிரிவு ஆட்டத்தில் கானாவை போர்ச்சுகல் நேற்று முன்தினம் 3-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
முதல் கோலை ரொனால்டோ போட்டார்.
ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக்கினார்.
இதன் மூலம் ஐந்து உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் கோல் போட்ட முதல் ஆட்டக்காரர் எனும் சாதனையும் பெருமையும் ரொனால்டோவைச் சேரும்.
"இது நான் களமிறங்கும் ஐந்தாவது உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி. இந்நிலையில், மிக அழகிய, மறக்க முடியாத அனுபவம் கிடைத்துள்ளது. முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டோம்.
"உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளோம். இது மிகவும் முக்கியம். இத்தகைய போட்டிகளில் முதல் ஆட்டத்தைக் கைப்பற்றுவது அவசியம்," என்று ஆட்டத்துக்குப் பிறகு பெருமிதத்துடன் தெரிவித்தார் ரொனால்டோ.
மற்றோர் ஆட்டத்தில் உருகுவேயும் தென்கொரியாவும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன. 'எச்' பிரிவில் இடம்
பெறும் இவ்விரு குழுக்களும் வெற்றிக்குக் குறிவைத்துப் போராடின.
இருப்பினும், இருதரப்பு குழுக்களாலும் கடைசிவரை கோல்போட முடியாமல் போனது.
கோல் போட கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளையும் இருதரப்பு
ஆட்டக்காரர்கள் நழுவவிட்டது ரசிகர்
களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
சவூதி அரேபியா, ஜப்பான் ஆகிய ஆசியக் குழுக்கள், இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அவற்றின் முதல்
ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில் வெற்றி முனைப்புடன் தென்கொரியா களமிறங்கியது. ஆனால், உருகுவேயின் தற்காப்பு அரண் பிடிவாதமாக நிற்க, சமநிலை கண்டு ஒரு புள்ளி மட்டும் பெற்றது தென்கொரியா. இருப்பினும், தங்கள் செயல்பாடு குறித்து தென்கொரிய நட்சத்திர வீரர் சொன் ஹியூங் மின் மகிழ்ச்சி தெரிவித்தார்.

