தோஹா: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதலில் வெளியேற்றப்பட்டுள்ள அணி கத்தார். போட்டியை ஏற்று நடத்தும் ஓர் அணி இவ்வளவு விரைவில் வெளியேற்றப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டத்தில் செனகலிடம் 3-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது கத்தார். அதற்குப் பிறகு அதே பிரிவில் இடம்பெறும் நெதர்லாந்தும் எக்குவடோரும் மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கத்தார் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது உறுதியானது.
எக்குவடோருக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த கத்தார் இந்த ஆட்டத்தில் சற்று மேம்பட்டிருந்தது. முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இந்த அணி போட்டியில் தனது முதல் கோலையும் போட்டது.
எனினும், இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதற்குத் தேவையான துடிப்பான ஆட்டம் கத்தாரிடம் காணப்படவில்லை.
கத்தாரின் தோல்வி அதன் ரசிகர்கள் சிலரைக் கோபத்துக்கு ஆளாக்கியது. குறைந்தபட்சம் தாங்கள் ரசிக்கும் அளவிற்கு கத்தாரின் விளையாட்டு இருந்திருக்கவேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்ததாக சிலர் கூறினர். இறுதியில் அந்த அளவுகூட அணியின் விளையாட்டு இல்லை என்று சொல்லி அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
முதல் ஆட்டத்தில் கத்தார் சரியாக விளையாடாதது ஏற்றுக்கொள்ளக்கூடியது; ஆனால் இரண்டாவது ஆட்டத்திலும் அணி ஏமாற்றத்தைத் தந்தது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றனர் வேறு சிலர்.
உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை இருமுறை மட்டுமே போட்டியை ஏற்று நடத்தும் நாடுகளின் அணிகள் முதல் சுற்றைத் தாண்டவில்லை. 2010ஆம் ஆண்டுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
2002ஆம் ஆண்டுப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறி ஆப்பிரிக்காவிற்குப் பெருமை சேர்த்த செனகல், கத்தாரை வென்றதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது. 'ஏ' பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் எக்குவடோரை வென்றால் செனகல் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
எனினும், துடிப்புடன் விளையாடும் எக்குவடோரை வெல்வது சவாலானதாக இருக்கக்கூடும்.

