அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இதுவரை இல்லாத அளவு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது எக்குவடோர் அணியின் (படம்) விளையாட்டு.
இதற்கு முன்பு மூன்று முறை போட்டிக்குத் தகுதிபெற்றது எக்குவடோர். ஆனால் இந்தப் போட்டியில் இருப்பதைப் போல் அதிக கவனத்தை ஈர்த்ததில்லை.
இம்முறை பல இளம் விளையாட்டாளர்கள் இருப்பதால் அணி உத்வேகத்துடன் விளையாடுவது அதற்குக் காரணம்.
'ஏ' பிரிவின் முதல் ஆட்டத்தில் எக்குவடோரின் வேகத்தைச் சமாளிக்க சிரமப்பட்டது கத்தார். நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தின் முதல் ஐந்து நிமிடங்களுக்குள் பின்னுக்குச் சென்றபோதும் விரைவில் மீண்டுவந்தது. நெதர்லாந்தால் எக்குவடோரை சரிவரக் கையாள முடியவில்லை.
போட்டியில் இதுவரை மூன்று கோல்களைப் போட்டுள்ளது எக்குவடோர். அனைத்து கோல்களையும் போட்டவர், இளம் படையின் தளபதியாக இருக்கும் அணித் தலைவர் எனர் வலென்சியா.
இதுவரை அதிகம் கவனிக்கப்டாதிருந்த 33 வயது வலென்சியா இப்போது உலகக் கிண்ணப் போட்டியில் ஆக அதிக கோல்களைப் போட்டு 'கோல்டன் பூட்' விருதை வெல்லும் இலக்குடன் இருக்கிறார்.
எனினும், முதல் இரு ஆட்டங்களிலும் வலென்சியா காயமடைந்தார். இன்று செனகலுக்கு எதிரான ஆட்டத்தில் வலென்சியா இடம்பெறுவார் என்று எக்குவடோர் நம்பிக்கை கொண்டுள்ளது.
அவர் இல்லாவிட்டால் அந்தக் குறை அணியின் விளையாட்டில் தெரியலாம்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றிகாணும் அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
நட்சத்திரம் சாடியோ மானே இல்லாத குறை செனகலிடம் உள்ளது. எனினும் அவர் இல்லாமலும் தன்னால் வெற்றிகாணமுடியும் என்பதை கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் நிரூபித்தது.
இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலானதாக இருக்கலாம். இதுவே 'ஏ' பிரிவில் இரு அணிகளும் களமிறங்கும் கடைசி ஆட்டம்.

