தோஹா: உலகக் கிண்ணப் போட்டியின் 'எஃப்' பிரிவு பெல்ஜியத்தை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று காற்பந்து உலகை அதிரவைத்தது மொரோக்கோ.
போட்டியில் அதிகம் கவனிக்கப்படவேண்டிய அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் கருதப்படுகிறது. ஆனால் வயதாகிவிட்ட அதன் பல நட்சத்திரங்களால் முன்பைப் போல் சிறப்பாக விளையாடமுடியாது என்ற அச்சமும் இருந்து வந்தது.
அதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது மொரோக்கோவின் வெற்றி. இந்த வெற்றியின் மூலம் மொரோக்கோவிற்கு இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ரொமெய்ன் சாய்ஸ், ஸக்காரியா அபூக்லால் ஆகியோர் கோல்களைப் போட்டனர். இரண்டு கோல்களும் ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களுக்குள் விழுந்தன.
மொரோக்கோவின் வெற்றியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் தலைநகர் புரசல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் மூண்டது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது, கலவரத்தில் ஈடுபட்டோர்மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பீய்ச்சியடித்தனர்.
அணிகளின் ரசிகர்களுக்கிடையே கலவரம் மூண்டதா என்பது தெரியவில்லை. மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் பெல்ஜியத்தில் வாழ்கின்றனர்.