தோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
முதல் சுற்றில் இங்கிலாந்து மொத்தம் பத்து கோல்களைப் போட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
முதல் ஆட்டத்தில் ஈரானை 7-2 எனும் கோல் கணக்கில் பந்தாடி, இரண்டாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் சமநிலை கண்டு, பிறகு வேல்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. வேல்ஸ் குழுவுக்கு எதிராக மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் இரண்டு கோல்களும் ஃபில் ஃபொடென் ஒரு கோலும் போட்டனர்.
இதுவே ஃபொடெனின் முதல் உலகக் கிண்ண கோலாகும்.
முதல் சுற்றில் பல கோல்கள் போட்டு முத்திரை பதித்துள்ள இங்கிலாந்து அணியால் இம்முறை இறுதி ஆட்டம் வரை சென்று கிண்ணம் ஏந்த முடியும் என்று அதன் நிர்வாகி கெரத் சவுத்கேட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குத் தடைக்கல்லாக செனகல் இருக்கிறது. இம்மாதம் 5ஆம் தேதியன்று செனகலுடன் இங்கிலாந்து மோதுகிறது.
வெற்றி பெறும் குழு காலிறுதிக்குத் தகுதி பெறும். செனகலை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. உலகக் கிண்ணப் போட்டியில் செனகலுக்கு எதிராக இங்கிலாந்து களமிறங்கியதில்லை. கவனம் சிதறினால் எதிரணியைப் புரட்டிப்போடும் ஆற்றல் செனகலுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

