தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் போலந்தை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ்.
பிரான்சின் முதல் கோலைப் போட்டவர் ஒலிவியேர் ஜிரூ. அதன் மூலம் காற்பந்து வரலாற்றில் பிரான்சுக்கு ஆக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜிரூ.
பிரான்சின் இதர இரண்டு கோல்களைப் போட்டார் பிஎஸ்ஜி நட்சத்திரம் கிலியோன் எம்பாப்பே. கடைசி சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி போலந்தின் ஒரே கோலைப் போட்டார் பார்சிலோனாவின் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி.
இந்த உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு பிரான்ஸ் அணியில் விரிசல் உள்ளது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. அவற்றைப் பின்னுக்குத் தள்ளி குழுவாக அபாரமாக விளையாடி வந்துள்ளது பிரான்ஸ்.
இந்தத் தோல்விக்குப் பிறகு போலந்து அணியில் விளையாடுவதிலிருந்து 34 வயது லெவண்டாவ்ஸ்கி ஓய்வுபெறக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
அது குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

