தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில், ஹாலிவுட் நட்சத்திரம் சில்வெஸ்டர் ஸ்டலோன் ஏற்று நடித்த குத்துச் சண்டை வீரரைச் சித்திரிக்கும் ‘ராக்கி பால்போவா’ எனும் பிரபல கதாபாத்திரத்தைப் போல் பிறருக்கு ஊக்கமூட்டும் அணியாக மொரோக்கோ அணி மலர்ந்துள்ளதெனக் கூறியுள்ளார் அதன் பயிற்றுவிப்பாளர் வாலிட் ரெக்ராகுய். உலகக் கிண்ண வரலாற்றில் மொரோக்கோ முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு சொன்னார்.
இதற்கு முன்பு போட்டியில் இரண்டாம் சுற்றைத் தாண்டாதிருந்த மொரோக்கோ, உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
“இந்த உலகக் கிண்ணப் போட்டியின் ‘ராக்கி பால்போவா’ நாங்கள்தான்,” என்று கூறிய ரெக்ராகுய், “இப்போட்டியில் எங்கள் அணியையே அனைவரும் விரும்புகின்றனர். அதிக நட்சத்திர ஆட்டக்காரர்களும் பணமும் இல்லாவிட்டாலும் முன்னேறமுடியும் என்பதை நாங்கள் நிரூபித்தது அதற்குக் காரணம்,” என்றும் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் போர்ச்சுகலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது மொரோக்கோ. 42வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார் யூசெஃப் எல்-நெசிரி.
அதற்குப் பிறகு போர்ச்சுகல் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தக் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் மொரோக்கோவின் கோல் காப்பாளர் யசீன் போனோவை நெருக்கத் தவறியது ேபார்ச்சுகல்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை ஆடிய ஆறு ஆட்டங்களில் ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது மொரோக்கோ. அதுவும் அதன் விளையாட்டாளர் ஒருவர் தவறுதலாக சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால்தான் அந்த கோல் விழுந்தது.
கனடாவும் மொரோக்கோவும் மோதிய முதல் சுற்று ஆட்டத்தில் கனடாவிற்கு அந்த கோல் விழுந்தது.
பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய பெரிய அணிகளைப் போட்டியிலிருந்து வெளியேற்றியிருக்கிறது மொரோக்கோ. அந்நாட்டில் மட்டுமின்றி உலகின் இதர பகுதிகளில் வசிக்கும் இந்த அணியின் ரசிகர்களும் உற்சாக வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.