தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து பிரேசில் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மனதளவில் தான் சீர்குலைந்துபோனதாகத் தெரிவித்துள்ளார் நெய்மார்.
"மனத்தளவில் நான் அழிந்துவிட்டேன். இதுவே என்னை ஆக அதிகம் காயப்படுத்தியுள்ள தோல்வி. ஆட்டம் முடிந்த பிறகு 10 நிமிடங்களுக்கு நான் உணர்வில்லாத அதிர்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதன் பின்னர் எனது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை," என்றார் பிரேசிலின் தலைசிறந்த நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் நெய்மார்.
குரோவேஷியாவுக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் பெனால்டி வாய்ப்புகளின் மூலம் தோல்வியடைந்தது பிரேசில். அதற்கு முன்பு வெற்றியாளரை நிர்ணயிக்க வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அபாரமான கோலைப் போட்டார் நெய்மார்.
ஆனால், அந்த கோலைத் தொடர்ந்து கூடுதல் நேரம் நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்திய குரோவேஷியா, பெனால்டி வாய்ப்புகளில் பிரேசிலை வெல்லவும் செய்தது.

