தோஹா: நடப்பு உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் தாக்குதலில் வலுவானதாகக் கருதப்படும் பிரான்சும் தற்காப்பில் சிறந்து விளங்கும் மொரோக்கோவும் இன்று பின்னிரவு நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.
இத்தாலி, பிரேசிலுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கிண்ணம் வெல்லும் அணி எனும் சாதனையைப் படைக்கும் வேட்கையுடன் உள்ளது பிரான்ஸ்.
எவரும் எதிர்பாராவண்ணம் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள மொரோக்கோதான் உலகக் கிண்ண அரையிறுதிக்குத் தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க அணி.
இந்நிலையில், அப்பெருமை மட்டுமே தங்களுக்கு மனநிறைவு தந்துவிடாது, இறுதிச் சுற்றே தங்களது இலக்கு என்று கூறியுள்ளார் மொரோக்கோ பயிற்றுவிப்பாளர் வலீத் ரெக்ரகி.
"உலகின் சிறந்த அணியை நாங்கள் எதிர்த்தாடவிருக்கிறோம். ஆனாலும், அடைய வேண்டுவது என்ன என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். பேரார்வமும் பெருவிருப்பமும் மிகுந்த கவனமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எங்களால் வெல்ல முடியும் என நாங்கள் நம்புகிறோம்," என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சொன்னார் திரு வலீத்.
தற்காப்பில் மற்ற அணிகளுக்குப் பேரச்சுறுத்தலாக விளங்கி வரும் மொரோக்கோ, இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளிலும் சேர்த்து ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.
அதே வேளையில், ஐந்தில் நான்கு ஆட்டங்களில் அவ்வணி வென்றுள்ளது.
குரோவேஷியா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளுடன் 'எஃப்' பிரிவில் இடம்பெற்றிருந்த மொரோக்கோ, ஏழு புள்ளிகளுடன் அப்பிரிவில் முதலிடம் பிடித்தது.
அத்துடன், இரண்டாம் சுற்றில் ஸ்பெயினையும் காலிறுதியில் போர்ச்சுகலையும் தோற்கடித்து, உலகக் காற்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இப்படி வலுவான அணிகளை எல்லாம் வீழ்த்தியுள்ள மொரோக்கோ அணியை குறைத்து மதிப்பிட்டு, அரையிறுதியில் மெத்தனமாக இருந்துவிடலாகாது என்று தம் அணியினரை எச்சரித்துள்ளார் பிரான்ஸ் அணியின் துணைத் தலைவர் ரஃபாயல் வரான்.
"மொரோக்கோ வீரர்கள் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதால், எதிர்த்தாக்குதலில் அவர்கள் அபாயகரமானவர்களாகத் திகழலாம்," என்றார் வரான்.
இதனிடையே, தமது அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதை மொரோக்கோ அணி தடுக்க விரும்பாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரான்ஸ் அணியின் தலைவர் யூகோ லோரிஸ்.
"இறுதிக்குத் தகுதிபெற இரு அணிகளுக்கு இது அரிய வாய்ப்பு. மொரோக்கோவிற்கு ஏற்கெனவே இந்த உலகக் கிண்ணம் வெற்றிகரமானதாக அமைந்துவிட்டது. ஆனாலும், அவர்கள் எங்களைத் தடுக்க விரும்ப மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றார் லோரிஸ்.
நான்கு ஆண்டுகளுக்குமுன் தங்களது பாணியில் ஆடி கிண்ணம் வென்றதாகக் குறிப்பிட்ட பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியே டெஷோம், தங்களால் வேறு பாணிகளிலும் ஆடமுடியும் என்று சொன்னார்.
"எதிரணியினருக்கு ஏற்ப ஆட்ட முறையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, சக வீரர்களின் ஆட்ட பாணியையும் கருத்தில்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
எம்பாப்பே, ஜிரூ, கிரீஸ்மன், டெம்பெலே எனச் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களை பிரான்ஸ் கொண்டுள்ளது. அதிக கோல் அடித்தோர் வரிசையில் எம்பாப்பேவும் (5) ஜிரூவும் (4) முதலிரு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது (இன்று அதிகாலை நடந்த முதல் அரை இறுதிக்கு முந்திய நிலவரம்).
எனினும், மத்தியத் திடல் ஆட்டக்காரர்களான சுவாமெனியும் ரபியோட்டும் அவ்வப்போது கட்டுப்பாட்டை இழந்துவிடுவது பலவீனமாக அமையக்கூடும்.
அதேபோல, தற்காப்பில் தகர்க்க முடியாத அணியாக விளங்கினாலும் கோல் போட மொரோக்கோ அணி தடுமாறலாம். எதிர்த்தாக்குதலையே பெரிதும் நம்பியுள்ள அவ்வணி, கடந்த போட்டிகளில் கோல் வாய்ப்புகளை உருவாக்கச் சிரமப்பட்டது.
இதனிடையே, இறுதிக்கு முன்னேறிய முதல் அணி அர்ஜென்டினாவா குரோவேஷியாவா என்பது இந்நேரம் தெரிந்திருக்கும்.

