தோஹா: கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் காலிறுதியுடன் பிரேசில் வெளியேறியதை அடுத்து, அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வெளிநாட்டவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற குரல் கிளம்பியுள்ளது.
இதற்கு, அவ்வணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
"கார்டியோலா, அன்சலோட்டி, மொரின்யோ போன்றோரில் ஒருவர் பிரேசில் அணிக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என விரும்புகிறேன்," என்றார் 46 வயதான ரொனால்டோ.
பிரேசில் அணிக்கு வெளிநாட்டவர் ஒருவர் பயிற்சியளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இராது என்று தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நடப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸ் அணியே வாகைசூடும் என்பது அவரது கணிப்பு.
1994, 2002ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணம் வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்திருந்த ரொனால்டோ, தம் நாட்டிற்காக 62 கோல்களை அடித்துள்ளார்.

