தோஹா: வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிப் போட்டியே தாம் விளையாடும் கடைசி உலகக் கிண்ணப் போட்டி என்று அர்ஜென்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி (படம்) அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி காற்பந்து நட்சத்திரமாக மிளிர்ந்துவரும் மெஸ்ஸிக்கு உலகக் கிண்ணம் மட்டும் கைக்கு எட்டாமல் நழுவி வருகிறது. அர்ஜென்டினா சார்பில் வரும் ஞாயிறன்று 172வது முறையாக இவர் களமிறங்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இம்முறை அக்கனவு நனவாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
"எங்களது அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப் போட்டியே உலகக் கிண்ணத்தில் எனது கடைசி ஆட்டமாக அமைவது சிறப்பான தருணம்," என்றார் மெஸ்ஸி.
தமது ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் 35 வயதான மெஸ்ஸி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை 11 கோல்களை அடித்திருக்கிறார்.
இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த அர்ஜென்டினா ஆட்டக்காரர் என்ற சாதனையை கேப்ரியல் பாடிஸ்டுடாவிடம் இருந்து பறித்து, தனதாக்கிக்கொண்டார் மெஸ்ஸி.
"சாதனை என்ற அளவில் நல்ல விஷயம்தான். ஆயினும், கிண்ணம் வெல்வது என்ற அணியின் நோக்கம் ஈடேறுவதுதான் மிகவும் முக்கியம். அதுவே, அழகான விஷயமும்கூட," என்றார் இவர்.
கிண்ணம் வெல்ல இன்னும் ஓர் அடிதான் எடுத்து வைக்கவேண்டி உள்ளது என்ற மெஸ்ஸி, இம்முறை அது கைகூட தங்களால் ஆன அனைத்தையும் செய்வோம் என்றும் உறுதியளித்தார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாட இருப்பது இது ஆறாவது முறை. 1978, 1986ஆம் ஆண்டுகளில் கிண்ணம் வென்ற அந்த அணி, கடைசியாக 2014ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

