உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதிபெற்றதை சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜென்டினா நாட்டவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
"எங்களுக்கு இது வெறும் ஆட்டம் மட்டுமன்று. இது குடும்பம், இது வரலாறு, கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை கிண்ணத்தை நெருங்கியும் அது கைசேராததால் கிட்டிய ஏமாற்றம். இப்போது மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளோம். இத்தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றும் திரு கில்லர்மோ பஸன்.
சைம்ஸ் லான் பகுதியில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்ட அரை இறுதி ஆட்டத்தைக் காணத் திரண்டிருந்த 50க்கும் மேற்பட்டோரில் திரு பஸனும் ஒருவர்.
அர்ஜென்டினாவின் 3வது கோலை அல்வரெஸ் அடித்து, வெற்றியை உறுதிப்படுத்தியதும் அவர்கள் அனைவரும் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர்.
இறுதி ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறார் சிங்கப்பூருக்கான அர்ஜென்டினா தூதர் மௌரிசியோ நைன்.
"எங்களது அணி வலிமையானது. அதே நேரத்தில், எதிரணியின் வலிமையையும் நாம் மதிக்க வேண்டும்," என்றார் அவர்.

