டொரோன்டோ: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சிறிய நாடான கத்தாரில் அரங்கேறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் கத்தார்தான் இப்போட்டியை ஏற்று நடத்தியிருக்கும் ஆகச் சிறிய நாடு.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தைவிட சிறியது கத்தார்.
அடுத்ததாக 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டி முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஒன்றல்ல மூன்று நாடுகள் போட்டியை ஏற்று நடத்தவுள்ளன.
கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026 உலகக் கிண்ணப் போட்டி அரங்கேறும்.
இதற்கு முன்பு ஒருமுறைதான் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தின. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் 2002ஆம் ஆண்டுப் போட்டி அரங்கேறியது.
இதற்கு முன்பு தனியாக இருமுறை போட்டியை ஏற்று நடத்தியிருக்கிறது மெக்சிகோ. 1970, 1986ஆம் ஆண்டுப் போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன.
அமெரிக்கா 1994ஆம் ஆண்டில் போட்டியை ஏற்று நடத்தியது. கனடாவிற்கு முதன்முறையாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1986, 1994ஆம் ஆண்டுப் போட்டிகளில் 24 அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதற்குப் பிறகு 1998ஆம் ஆண்டுப் போட்டியிலிருந்து பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32க்கு உயர்த்தப்பட்டது.
இனி 2026ஆம் ஆண்டுப் போட்டியிலிருந்து அந்த எண்ணிக்கை 48க்கு அதிகரிக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருக்கும் 16 நகரங்களில் ஆட்டங்கள் இடம்பெறும்.
அனைத்து ஆட்டங்களும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்வதே பெரும் சவால். அத்துடன் அணிகளுக்கான பயிற்சி வசதிகளையும் செய்து தரவேண்டும்.
பெரும்பாலான ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெறும். அந்நாட்டின் 11 நகரங்களில் ஆட்டங்கள் இடம்பெறும். மெக்சிகோவின் குவாடாலஹரா, மொன்டெரே, தலைநகர் மெக்சிகோ சிட்டி, கனடாவின் டொரோன்டோ, வான்கூவர் ஆகிய நகரங்களிலும் ஆட்டங்கள் நடைபெறும்.
போட்டியின் காலிறுதியாட்டங்கள், அரையிறுதியாட்டங்கள், இறுதியாட்டம் ஆகியவை அமெரிக்காவில் நடக்கும்.
வழக்கத்துக்கு மாறாக இவ்வாண்டின் போட்டி ஆண்டிறுதியில் நடைபெறுகிறது. கோடைக்காலத்தில் கத்தாரின் சுட்டெரிக்கும் வெயிலைத் தவிர்க்க பங்கேற்கும் அணிகளுக்கு உதவுவது அதன் நோக்கம்.
அடுத்த போட்டி மீண்டும் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறும்.
மாறுபட்ட சூழலில் இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி இடம்பெற்றுள்ளது. கத்தாரின் மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் எழுந்த பல சர்ச்சைகளுக்கு மத்தியில் போட்டி நடைபெற்றுள்ளது.
போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டதில்கூட சர்ச்சைகள் இருந்தன. இருந்தாலும் இந்த உலகக் கிண்ணப் போட்டிதான் ஆகச் சிறந்ததென்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ அண்மையில் பாராட்டியிருந்தார்.
சர்ச்சைகள் இருந்தாலும் ஆட்டங்கள் சுமூகமாக நடைபெற்றன, பல எதிர்பாரா திருப்பங்கள் கவனத்தை ஈர்த்தன.
இதற்கு முன்பு இல்லாத வகையில் அடுத்த போட்டியின் முதல் சுற்றில் மூன்று அணிகளைக் கொண்ட பிரிவுகள் இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் போட்டியின் முதல் சுற்று மிகவும் விறுவிறுப்பாக இருந்ததைத் தொடர்ந்து திட்டம் மாற்றப்படலாம் என்றும் இன்ஃபன்டினோ கூறியிருந்தார்.

