அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடியும் இறுதியாட்டத்திற்கு முன்னேற முடியாமல் போன குரோவேஷியாவுக்கு வெண்கலப் பதக்கத்தின் மூலம் ஆறுதல் கிடைத்தது.
இவ்வாண்டின் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணியைத் தீர்மானிக்கு ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்ற குரோவேஷியா, சென்ற போட்டியில் எதிர்பாரா விதமாக இறுதியாட்டம் வரை சென்றது. அதற்குப் பிறகு இவ்வாண்டின் போட்டியில் அணி சோபிக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
எனினும், காலிறுதியாட்டத்தில் பெனால்டிகளின் மூலம் கவர்ச்சியாக விளையாடிவந்த பிரேசிலை வென்று குரோவேஷியா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது அதன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அரையிறுதியாட்டத்தில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்திருந்தாலும் மொரோக்கோவுக்கு அடுத்தபடியாக குரோவேஷியாவின் விளையாட்டுதான் பலரைக் கவர்ந்தது என்றால் அது மிகையில்லை.
"எனது அணியில் உள்ள சில வயதான விளையாட்டாளர்களுக்கு இதுவே கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக இருக்கும். அதே வேளையில் அணியில் சில இளம் வீரர்களும் இருக்கின்றனர். அது குரோவேஷியாவுக்கு பெரும் நற்செய்தி," என்றார் குரோவேஷிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்லாட்கோ டாலிச். அணியின் சில முக்கியமான விளையாட்டாளர்களுக்கு வயதாகிவிட்டபோதும் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குரோவேஷியா. வரலாற்றில் முதன்முறையாக சென்ற போட்டியில் இறுதியாட்டத்திற்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலைில் குரோவேஷிய அணித் தலைவரான 37 வயது லுக்கா மோட்ரிச் தேசிய அணிக்கு அடுத்த ஆண்டும் தொடர்ந்து விளையாடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், யூரோ 2024 போட்டியில் அவர் பங்கேற்கக்கூடும் என்று முன்னதாக சொல்லப்பட்டது. அது குறித்து மோட்ரிச் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
யூரோ 2024 போட்டியில் மோட்ரிச் விளையாடுவார் என்று டாலிச் நம்பிக்கை கொண்டுள்ளார்.

