கொச்சி: 16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்குத் தயாராகும் வகையில் பத்து அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த முதல் வீரர் ரகானே ஆவார்.
இந்திய நட்சத்திர வீரர் ரகானேயை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கோல்கத்தா அணிக்காக விளையாடினார்.
இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
ஆந்திராவைச் சேர்ந்த 18 வயது ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஹரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.
இவரை ரூ.60 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு: எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்சனா, ஸ்டோக்ஸ், ரகானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மண்டல், பகத் வர்மா